தீவைத்து எரிக்கப்பட்ட பெண் ஊழியர்- வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
கோவை மாவட்டத்தில் பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலை செய்யப்பட்ட பெண் 37 வயதுடையவர் என்றும் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இவர் கோவையில் உள்ள லைட்ஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த பெண் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய தொழில் அதிபரான நவநீதன் என்பவரின் லைட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
தொழிலதிபரான நவநீதனுக்கு கோவையில் மட்டுமல்லாமல் ஈரோட்டிலும் டைல்ஸ் நிறுவனம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் தீக்காயங்களுடன் அந்த பெண் கோவை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
அதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது, மருத்துவச் செலவுக்கு அந்த பெண் பணம் கேட்டு வந்ததாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தொழிலதிபர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடமும் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதன் போது, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தன்னை தொழில் அதிபர் நவநீதன் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார் என அந்த பெண் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பெண் தொடர்ந்து 6 முறை கருத்தரித்தாகவும், 6 முறையும் குறித்த தொழிலதிபர், மிரட்டியே தனது கருவை கலைக்கச் செய்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டமையால் மருத்துவ உதவிக்காக பணம் கேட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் போதே நவநீதனும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து தன் மீது தீவைத்து எரித்தனர் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால் இந்த வழக்கை காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். அதனையடுத்து தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்து. இந்நிலையில், காவல்துறையினர் அவர்களைத் தேடிச் சென்ற போது 2 பேரும் தலைமறைவாகி இருந்தனர்.
அவர்களை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் பல்வேறு இடங்களுக்கும் சென்று தேடி வந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை கோர்ட்டில் நேற்று தொழில் அதிபர் நவநீதன் சரண் அடைந்தார்.
அவரை திருச்சி மத்திய நிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி சிறையில் நவநீதன் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இளம்பெண் மரண வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆர்.எஸ்.புரம் காவல்துறைியனர் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். நவநீதனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அவரை திருச்சி சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் மனு தாக்கல் நெய்யவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மனு எதிர்வரும் 6 ஆம் திகதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தொழிலதிபரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைக்கும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நவநீதனின் மனைவி எங்கு தலைமறைவாகி உள்ளார் எனவும் விசாரணை நடைபெறுகின்றது. அவரை கைது செய்ய காவல்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
உயிரிழந்த பெண் நீண்ட நாட்களாக நவநீதனின் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.