இந்திய மீனவர்களின் தீர்மானம் -அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட அறிவிப்பு
எல்லை தாண்டிய மீன்பிடி முறையை கை விடுவதாக இராமேஸ்வரம் மீனவர்கள் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) இதுபோன்று பல அறிவிப்புகள் ஏற்கனவே வந்து போயுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எல்லைதாண்டிய மீன்பிடி முறையை கைவிடுவதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த நிலையில் அமைச்சர் என்ற வகையில் நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என அவரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருக்கின்ற பிரச்சினை. நான் ஜனநாயக தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டதிலிருந்து இந்த பிரச்சினைக்க தீர்வு காண வேண்டும் என்று நானும் முன்னெடுத்து வந்தேன். இரண்டு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றேன். ஆனால் பேச்சுவார்த்தையில் ஓர் இணக்கப்பாடு வரவில்லை.
அதே நேரத்தில் நான் மூன்று வகையான அணுகுமுறைகளை முன்னெடுக்கின்றேன். ஒன்று இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை. இரண்டாவது, இந்த தடை செய்யப்பட்ட தொழில் மற்றும் அதனை மேற்கொள்வதால் ஏற்படும் பாதக நிலை தொடர்பில் இரண்டு பக்கங்களிற்கும் விழிப்புணர்வூட்டுதல். மூன்றாவது முறைமை சட்ட நடவடிக்கை. சட்ட நடவடிக்கை எனும்பொழுது கைது செய்வதாகும்.
இந்த கைது செய்கின்ற நடவடிக்கைகளின்போது துரதிஸ்டவசமாக இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. அது கவலைக்குரிய விடயம்தான். இருந்தாலும், நாங்கள் பொட்டம் ரோளிங்கிற்கு எந்த வகையிலும் இடம் கொடுக்க முடியாது. அதனை ஏதோவொரு வகையில் தடுத்தேயாவேன்.
இந்திய தரப்புகள் இவ்விடயத்தில் கூடுதலான முயற்சிகள் எடுப்பதாக கேள்விப்படுகின்றேன். அது வரவேற்கத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தக்கூடாது என்றும், இலங்கை கடற் பகுதிக்குச் சென்று, ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிலில் ஈடுபடக்கூடாது என்றும் தீர்மானித்துள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள அலுவலகம் ஒன்றில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா தெரிவித்திருந்தார்.