கெஹல்பத்ரவை கைது செய்யும் திட்ட பின்னணியில் இந்திய புலனாய்வு!
இந்துனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலில் ஐவரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த கைது நடவடிக்கையில் இந்திய புலனாய்வு பிரிவின் உதவி கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
கெஹெல்பத்தர பத்மே
“கைது செய்யப்பட்டவர்களில் 'கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த', 'பெக்கோ சமன்' மற்றும் 'நிலங்க' ஆகியோரும் உள்ளனர்.
கடந்த ஏழு நாட்களாக எமது காவல்துறையினர் மற்றும் இந்துனேசியா காவல்துறையினர் இணைந்து நடத்திய தோடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தில் இந்தியாவின் புலனாய்வு பிரிவினர்,சர்வதேச காவல்துறையினர் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.” என்றார்.
இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், இன்டர்போல் மற்றும் இந்தோனேசிய பாதுகாப்புப் படைகள் இணைந்து இந்த சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பாணந்துரே நிலங்க ஆகிய பாதாள உலக நபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய சம்பவங்கள்
அவர்கள் சமீபத்திய காலங்களில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தக் குழுவுடன் பாக்கோ சமனும்(மித்தெனிய மூவர் கொலையுடன் தொடர்புடையவர்) அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
சிறிது காலம் துபாயில் இருந்த இந்தக் குற்றவாளிகள், பின்னர் மலேசியாவிற்கும், அங்கிருந்து இந்தோனேசியாவிற்கும் தப்பிச் சென்று இரகசியமாக வசித்து வந்துள்ளனர்.
சிறப்புத் தகவல் தெரிவிப்பவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நீண்ட விசாரணைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, சமீபத்தில் கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவர் கணேமுல்லா சஞ்சீவவின் கொலையை வெளிநாட்டிலிருந்து திட்டமிட்டு நடத்திய முக்கிய குற்றவாளி கெஹல்பத்தர பத்மே ஆவார்.
இந்தக் கைதுடன், இந்த நாட்டில் செயல்படும் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

