கனடாவில் பட்டப்பகலில் சுட்டுகொல்லப்பட்ட இந்தியர்...! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை
கனடாவில் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கர்நாடகாவைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தன் குமார் ராஜா நந்தகுமார் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
டொராண்டோவின் ரெக்ஸ்டேல் பௌல்வார்ட் (Rexdale Boulevard) பகுதியில் அமைந்துள்ள வுட்பின் ஷாப்பிங் சென்டரின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து, பகல் 3.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர தேடுதல்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், படுகாயமடைந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான நபரை மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தப்பியோடிய குற்றவாளியைக் கண்டுபிடிக்க டொராண்டோ காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
இக்கொலைச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதி என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெளிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர், பிராம்ப்டன் பகுதியில் வசித்து வந்ததுடன், அங்குள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் அதிகரித்து வரும் இத்தகைய துப்பாக்கிக் கலாசாரம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள், அங்கு வாழும் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அச்சத்தையும் தங்களது பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |