நெருக்கடியான தருணத்தில் இந்தியா பச்சைக்கொடி
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடியைச் சமாளிக்க நெருங்கிய அண்டை நாடாக இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று இந்தியா உறுதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய கடன் வசதியின் கீழ் அண்மையில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெற்ற போதிலும், இந்தியாவிடம் இருந்து புதிய உதவியை கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பான மதிப்பீடுகளுக்காக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவத்ரா தலைமையிலான நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் இன்று கொழும்பை வந்தடைந்தனர்.
புது டெல்லியில் இருந்து காலை 9.20 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷ பாராட்டு
இந்தக் குழுவினர் இன்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
அரச தலைவர் மாளிகையில் வைத்து கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதில் இந்திய அரசாங்கமும் அரசியல் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் தொடர்ந்து ஆதரவளித்துவரும் இந்திய அரசாங்கத்திற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இக்கட்டான காலகட்டத்தை இலங்கை உடனடியாக சமாளிக்கும்
இந்த இக்கட்டான காலகட்டத்தை இலங்கை உடனடியாக சமாளிக்கும் என தூதுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்ததாக அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் உதவி மூலம் இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள், மருந்துகள் மற்றும் உரங்கள் இதுவரை கிடைத்துள்ளதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.