அரசியல் தலைமைகளுக்கான விசேட பிரமுகர் பாதுகாப்பு...! வெளியான அறிவிப்பு
இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அது தன்னிச்சையாக வழங்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
விசேட பாதுகாப்புகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அசோக ரன்வல, மொஹமட் ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யோகமகே, சுனில் பியன்வல, தினேஷ் ஹேமமந்த, ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எம். தர்மசேன மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகிய 11 நபர்களுக்கும் எந்தவித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்பதை விசேட பாதுகாப்புப் பிரிவு, காவல்துறை மா அதிபருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அமைச்சர்களாகிய எமக்கே கூட இத்தகைய விசேட பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள 2020 ஆம் ஆண்டின் 2398/26 இலக்க காவல்துறைச் சுற்றறிக்கைக்கு அமையவே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாதுகாப்புத் தேவை
பாதுகாப்புத் தேவை எனக் கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அரச உளவுச் சேவையினூடாக ஒரு விசேட அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை கோரப்படும்.

அதனடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையிலான விசேட குழுவின் பரிந்துரையின் பேரிலேயே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு, தற்போது அவர்கள் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டாலும் உளவுத்துறையின் அச்சுறுத்தல் விவரங்களின் அடிப்படையிலேயே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |