செம்மணி மனிதப் புதைகுழி: இன்று மீண்டும் ஆரம்பமாகும் அகழ்வுப் பணிகள்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 56 நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
கடந்த 32 நாள்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
அகழ்வுப் பணி
இந்நிலையில், இன்று (15-07-2026) பணிகள் மீண்டும் தொடரவுள்ளன.

முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளானது கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பமாகி, 9 நாள்கள் நடைபெற்ற அகழ்வுகளில் 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளானது கடந்த ஆண்டு ஜூன் 26 முதல் செப்டம்பர் 3ஆம் திகதி வரை 45 நாள்கள் நடைபெற்ற அகழ்வுகளில், முதலாம் கட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை உட்பட மொத்தம் 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
எலும்புக்கூடுகள் அடையாளம்
மூன்றாம் கட்ட (முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி) அகழ்வுப் பணிகளானது கடந்த ஏப்ரல் 27 முதல் மே 9 வரை 12 நாள்களும், ஜூன் 1 முதல் ஜூன் 23 வரை 22 நாள்களும் பணிகள் இடம்பெற்றன.

இதில் மே மாதம் மட்டும் 21 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 409 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |