இலங்கையின் கல்வித்துறையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் : அநுர அதிரடி அறிவிப்பு
இலங்கையின் கல்வித் துறையில் எதிர்கால சந்ததியினரை நவீன உலகிற்கு ஏற்பத் தயார்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இப்புதிய கல்வி முறையின் கீழ் கல்வி கற்கும் மாணவர்கள் 2032ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைகளை எழுதி வெளியேறவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
"ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி" எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம் நேற்று (06) களுத்துறை மாவட்ட பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களை உருவாக்கத் திட்டம்
அத்துடன் குறித்த மாணவர்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 2032ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 50 புதிய தொழிற்துறை மற்றும் உயர் கல்விப் பல்கலைக்கழகங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் களுத்துறை போன்ற மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக நகர்த்துவதற்காகப் போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய பிரதான துறைகளில் பல துரிதமான மற்றும் தொலைநோக்குச் சிந்தனையிலான அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாடுகளிடம் எத்தகைய கடன்களையும் பெறாமல் உள்நாட்டு நிதி ஆதாரங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |