ஒரு மாத காலப்பகுதியில் சிறுவர்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
இலங்கையில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 17 ஆயிரம், சிறுவர்களின் ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் அதுதொடர்பிலான எச்சரிக்கைகள் மற்றும் தரவுகள், சுயமாகவே சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து கண்டறியும் நிலையத்திற்கு கிடைத்துவிடுமென, ஸ்ரீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை சிறுவர்கள் தொடர்பான 17 ஆயிரத்து 629 ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
மடிக்கணனிகள், கணனிகள், கைத் தொலைபேசிகள் மற்றும் ரப்கள் வழியாக இவை பதிவேற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தொடர்பான ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட விடயங்களை கண்காணிக்க விசேட காவல்துறை குழுவொன்று சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் நிறுவப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து கண்டறியும் நிலையம் என இந்த பிரிவு பெயரிடப்பட்டுள்ளதோடு, இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுவர்கள் குறித்த சட்டவிரோத விடயங்களை இது கண்டறியும் என அவர் குறிப்பிட்டார்.
சிறுவர்கள் தொடர்பான ஆபாச உள்ளடக்கங்களை இணையத்தில் பதிவேற்றும் சந்தேகநபர்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தரப்பினருக்கு இதுபோன்ற உள்ளடக்கத்தைப் பகிர்ந்த அல்லது அனுப்பிய நபர்களையும் காவல்துறை கண்டறியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக சிறுவர்களுக்கு ஏதாவது பாதிப்புகள், துஷ்பிரயோகம் அல்லது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றிருக்குமானால், துஷ்பிரயோக சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.