படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி குறித்து பிரதி அமைச்சரின் அறிவிப்பு
வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் பல ஊடகவியலாள்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம் என வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.
அத்துடன் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன் தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வவுனியாவில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
காப்புறுதி திட்டம்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலின் போது எதிர்நோக்கும் கஸ்டங்கள் தொடர்பில் எமக்கு தெரியும்.
ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அரச ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற முடியும். ஏனைய ஊடக நிறுவனங்களும் சரியான முறையில் ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் கொண்டு வரவுள்ளேன். இதனை ஒரு வருடத்திற்கு மட்டும் வழங்காது தொடர்ச்சியாக வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில்கள், கடன் திட்டங்கள வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நாம் பரிசீலித்து சிறந்த தீர்வினை வழங்கவுள்ளோம்.
கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள நடைமுறைப்படுத்தும் போது ஊடகவியலாளர்களுக்கும் வீட்டுத்திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது அரசாங்கம் 2029 ஆம் ஆண்டுக்குள் வீடற்ற அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக ஊடகவியலாளருக்கும் ஏதோ ஒரு வகையில் வீட்டுத்திட்டம் கிடைக்கும்.
ஊடகவியலாளர்களுக்கு நீதி
அத்துடன், கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் 20 வருடங்களுக்கு மேலாக உள்ளது. நாம் பல வழக்குகளை தற்போது துரிதப்படுத்தி நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோம்.
தேங்கியுள்ள வழக்குளை துரிதமாக முடிப்பதற்காகவே நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்க யோசனை முன்வைத்துள்ளோம். கடத்தப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீதியைப் பெற ஆதாரங்கள் பல இல்லை. அவற்றை திரட்ட வேண்டியுள்ளது.

அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறும். ஆதாரங்கள் தேவை. அதன் மூலமே நீதியைப் பெற முடியும். இருப்பினும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் வேறு வகையிலும் பல சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்கள் அதில் தண்டனை பெறுவார்கள்.
அந்த வகையில் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன் தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள்.
வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர். எனவே இதனை நாம் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம்.
எமது அரசாங்கம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஊடக நிறுவனங்களுடனும் பேசி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற நடவடிக்கை எடுக்கும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |