இடைக்கால அரசாங்கத்திலும் நானே பிரதமர்
இடைக்கால அரசாங்கத்திலும் தானே பிரதமர் எனவும் ரணில் விக்ரமசிங்கவையோ வேறு நபர்களையோ பிரதமராக நியமித்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க விரும்ப மாட்டார்கள் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி வழி செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்
அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இல்லாத நிலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது எப்படி. இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் அனைவரும் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.
வரலாறு பற்றி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரே என்னை பதவி விலகுமாறு கோருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்கள் என்னுடன் உள்ளனர்.
கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர், யுவதிகளை நான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றேன். பேச்சுவார்த்தை வரவில்லை என்றால், அவர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க நேரிடும்.
நாடு கஷ்டமான இடத்தில் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கத்திற்கு சக்தி இருக்கின்றது.
நாடு இதனை விட நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்கள் வரலாற்றில் தேவையான அளவுக்கு இருக்கின்றன எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.