தோனி இன்னும் 4 ஆண்டுகளுக்கு விளையாடலாம் - மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல வீரர்
ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி இன்னும் 4 ஆண்டுகளுக்கு விளையாடலாம் என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 31ம் திகதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் பயிற்சிக்காக சமீபத்தில் சென்னை வந்தடைந்தார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
4 ஆண்டுகளுக்கு விளையாடலாம்
தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, ஐபிஎல் 2023க்கான பயிற்சியில் தோனி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஐபிஎல் தொடரில் தோனி இன்னும் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்கு விளையாடலாம் என்று சென்னை அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் சீசன் என்று கேள்விபட்டேன். ஆனால், நான் அவ்வாறு நினைக்கவே இல்லை.
தோனி அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்கு விளையாடலாம். அவர் இன்னும் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார்.
பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் நன்றாக விளையாடுகிறார். அவரது ஆட்டத்தை போலவே அவரது கேப்டன் ஷிப்பும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. CSK வெற்றி பெற தோனியும் ஒரு முக்கிய காரணம் என்றார்.
