இனிப்பு வழங்கிய மாணவனுக்கு மரண தண்டனை - ஈரானில் தொடரும் கொடூரம்!
ஈரானில் பெண் உரிமைகளுக்காக போராடி வரும் மக்களுக்கு இனிப்பு வழங்கி ஆதரித்த மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் கடவுளுக்கு எதிராக போராடியதாக கூறியே, ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. தலைநகர் தெஹ்ரானின் மேற்கே கஸ்வின் நகரில் வசிக்கும் 21 வயதான முகமது நசிரி என்ற இளைஞரே, கடவுளுக்கு எதிராக போராடியதாகத் தெரிவித்து கைதாகியுள்ளார்.
கடந்த மாதம் தமது மூன்று நண்பர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இனிப்பும் சிற்றுண்டியும் வழங்கியுள்ளார்.
கட்டாய வாக்குமூலம்
இதன் போது முகமது நசிரியை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளதுடன், கட்டாயத்தின் பேரில் பொய்யான ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்க வைத்துள்ளனர்.
அதாவது, அரசுக்கு ஆதரவான போராளிகள் குழு உறுப்பினர் ஒருவரை முகமது நசிரி கத்தியால் தாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையிலேயே முகமது நசிரி தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
ஏற்கனவே போராட்டக் களத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களை ஈரான் நிர்வாகம் தூக்கிலிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இருந்தே நாடு முழுவதும் நடந்துவரும் போராட்டங்களை ஒடுக்கும் வகையில், தற்போது ஆளும் நிர்வாகம் கடவுளுக்கு எதிராக போராடினார்கள் என கூறி கைது செய்வதும் தண்டனை விதிப்பதுமாக உள்ளது.
இவ்வாறான நிலையில், மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள முகமது நசிரியின் நண்பர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நவம்பர் 12ம் திகதி வழிபோக்கர் ஒருவர் தங்களை எச்சரித்ததாகவும், மாறுவேடத்தில் காவல்துறையினர் தங்களை கண்காணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் இருந்து முகமது நசிரியும் நண்பர்களும் வெளியேறியுள்ளனர்.
மரண தண்டனை
ஆனால் காவல்துறையினர் துரத்திச் சென்று முகமது நசிரியை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, மூன்று நான்கு பேர் ஒன்றிணைந்து முகமது நசிரியை மூர்க்கத்தனமாக தாக்கியதுடன், குற்றுயிராக கிடந்த நசிரியை அவர்கள் இழுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், அரசு சார்பு உள்ளூர் ஊடகம் ஒன்றில் நசிரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அரசு ஆதரவு போராளி குழு உறுப்பினரை கத்தியால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது முகமது நசிரி மரண தண்டனையை எதிர் நோக்கி சிறையில் உள்ளார். அரசுக்கு எதிராக செயல்படும் எவராக இருந்தாலும் கடவுளுக்கு எதிராக போர் தொடுத்தவர் என்று கூறி ஈரான் நிர்வாகம் தண்டித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

