18 கோடி ரூபாய் கட்டணம் என்பது வதந்தி...! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் அதிரடி
ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 18 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
முன்னதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலாதீன் புருஜெர்டி இத்தகைய கட்டணம் குறித்துக் குறிப்பிட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், இந்தியாவிலுள்ள ஈரான் தூதரகம் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
மின் கட்டமைப்புகள்
48 மணி நேரத்திற்குள் இந்த நீர்வழியைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த இக்கட்டான சூழலில், கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் அறிக்கைகள் அனைத்தும் தனிப்பட்ட நபர்களின் கருத்துகளே தவிர, அவை ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த நீர்வழியைச் சுற்றி நிலவும் இராஜதந்திரப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ஈரானின் இந்த விளக்கம் சர்வதேசச் சந்தையில் நிலவும் குழப்பத்தைத் தீர்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |