IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி : அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தி, அதிலிருந்த கடற்படையினரைக் கொலை செய்தமைக்காக, எதிரித் தரப்பினர் மீது பாரிய பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி (Shahram Irani) எச்சரித்துள்ளார்.
அத்துடன் "நாங்கள் எமது தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவோம் எதிரி சற்றும் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து மரண அடி கொடுப்போம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அரச ஒளிபரப்பு நிறுவனமான பிரஸ் டிவிக்கு கருத்து வெளியிட்ட போதே கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி Shahram Irani இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமீர் ஹதாமி வெளியிட்ட அறிக்கை
ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் தாக்கப்பட்டதற்கு நிச்சயமாகப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் இராணுவத் தலைவர் அமீர் ஹதாமி (Amir Hatami) அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 4ஆம் திகதியன்று இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த 'IRIS Dena' என்ற ஈரானியக் கடற்படைக் கப்பல், இலங்கை காலிக்கு அண்மையில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 87 ஈரானிய மாலுமிகள் உயிரிழந்ததுடன் 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |