FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! மாற்றப்படும் போட்டி இடங்கள்
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிகளில் ஈரான் அணியின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், அந்த அணியின் போட்டிகளை மெக்சிகோவில் நடத்துவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அணி அமெரிக்காவில் விளையாடுவது அவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்றதாக இருக்காது எனக் கூறியதைத் தொடர்ந்து, அந்த அணியை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என ஈரான் கால்பந்து சம்மேளனத் தலைவர் மெஹ்தி தாஜ் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், FIFA உடன் கலந்துரையாடி போட்டிகளை மெக்சிகோவில் நடத்த முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அணியின் பங்கேற்பு
இந்த உலகக்கோப்பை FIFA World Cup 2026 ஜூன் 11 முதல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் தொடங்க உள்ளது.

இதில் ஈரான் அணி, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சீயாட்டில் நகரங்களில் குழு போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய விமானத் தாக்குதல்களுக்கு பின், ஈரான் அணியின் பங்கேற்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இறுதி முடிவு
எனினும், ஈரான் அணி போட்டியில் இருந்து விலகுவதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதன் பொதுச் செயலாளர் வின்சர் ஜான் கூறுகையில், இறுதி முடிவு ஈரான் கால்பந்து சம்மேளனத்தின்தான், தற்போது அவர்கள் போட்டியில் பங்கேற்பதாகவே தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் ஈரான் அணியின் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |