அமெரிக்கா–ஈரானின் இரகசிய டீல்: அம்பலப்படுத்திய முக்கிய புள்ளிகள்
அமெரிக்காவும் (America), ஈரானானும் (Iran) பலமுறை இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெருக்கடிக்கு இராஜதந்திர முடிவைக் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மூன்று தூதர்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையானது அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கி ஆகியோருக்கிடையில் தொலைபேசியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடங்கிய தாக்குதல்
இந்த விடயத்தின் உணர்திறன் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத இராஜதந்திரிகளின் கூற்றுப்படி, ஜூன் 13 அன்று தொடங்கிய தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பாது என்று அரக்சி கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஈரானுக்கு வெளியே யுரேனியத்தை வளப்படுத்தும் ஒரு பிராந்திய கூட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மே மாத இறுதியில் ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய ஒரு முன்மொழிவு பற்றிய சுருக்கமான விவாதமும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த முன்மொழிவை தெஹ்ரான் நிராகரித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து இதுவரையில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் எவ்வித கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பேச்சுவார்த்தை
ஏப்ரல் மாதத்தில் இருவரும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதிலிருந்து இந்த வாரத்தில் இடம்பெற்றுள்ள இந்த தொலைபேசி உரையாடல்கள் மிகவும் முக்கியமான நேரடி உரையாடல்களாகும்.
அந்த சந்தர்ப்பங்களில், ஓமன் மற்றும் இத்தாலியில், மறைமுக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகு இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தபோது சுருக்கமான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் அமெரிக்கா, போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தால் தெஹ்ரான் அணுசக்தி பிரச்சினையில் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட முடியும் என அரக்சி விட்காஃபிடம் கூறியதாக ஈரானுக்கு நெருக்கமான ஒரு பிராந்திய இராஜதந்திரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
