கடவுச்சீட்டு பெற செல்லவிருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
நாட்டில் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) தெரிவித்துள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெறுவதற்கு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கருமபீடம் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பதிராஜா (Chaminda Pathiraja) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
நெரிசல் இல்லாமல் கடவுச்சீட்டு
வாரத்தின் வேலை நாட்களில் 4 மணி நேரத்திற்குள் நெரிசல் இல்லாமல் கடவுச்சீட்டுகளை பெறுவது சாத்தியமாகும் என சமிந்த பதிராஜா தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 09 ஒரு நாள் சேவை கருமபீடம் தற்போது முழு திறனுடன் இயங்கி வருகின்றன.
இதில் 08 ஒரு நாள் கரும பீடங்கள் மற்றும் முன்னுரிமை கருமபீடம் ஆகியவை அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் சேவை
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெறுவதற்கு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கரும பீடங்கள் திறந்திருக்கும்.
காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடவுச்சீட்டை பெறுவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இரவு முதல் பகல் வரை வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நாள் சேவையின் கீழ் தினமும் சுமார் 2000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
பிற்பகல் 2.00 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேரம் இருப்பதால் காலையில் திணைக்கள வளாகத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை என திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
