ரஷ்யா மீது பன்னாட்டு அழுத்தம் தேவை: ஜெலன்ஸ்கி வேண்டுகோள்
போர் நிறுத்தத்தை அடைய ரஷ்யா (Russia) மீது சர்வதேச சமூகம் மேலும் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போர், இரு தரப்பிலும் பெரும் அழிவையும் இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெலன்ஸ்கி பலமுறை போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும், ரஷ்யா போரை நிறுத்த சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.
நேரடி பேச்சுவார்த்தை
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆரம்பகட்ட அழுத்தத்தின் காரணமாக, ரஷ்யா உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது.
ஆனால், இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும் ரஷ்யா தனது இராணுவ தாக்குதலைத் தொடர்ந்தது.
அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இதில் 28 பேர் உயிரிழந்தனர் மற்றும் 142 பேர் காயமடைந்தனர்.
சர்வதேச சமூகம்
இந்த சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்தை அடைய ரஷ்யா மீது சர்வதேச சமூகம் மேலும் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி தனது வேண்டுகோளை தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல், ரஷ்யா போர் நிறுத்தத்தை நிராகரித்து கொலையைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், போரின் உண்மையான விலையை ரஷ்யா உணர அழுத்தம் கொடுக்கத் தயாராக இருக்கும் நட்பு நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
