ஈரானிய கடற்படையை மீட்ட சிறிலங்கா!
மத்திய கிழக்குப் போர்க்களத்தால் இலங்கைக்கும் நெருக்கடி வரும் எனச் சிறிலங்கா அரசதலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் சொல்லிய பின்னணியில், அவரே எதிர்பாராத ஒரு நெருக்கடி ஈரானியப் போர்க்கப்பலான டெனா (IRIS Dena) இலங்கைக் கடற்பரப்புக்கு அப்பால் மூழ்கிய செய்தியுடன் வந்துள்ளது.
ஈரானியக் கடற்படை முற்றாக அழிக்கப்படும் என அமெரிக்க அரச தலைவர் ட்ரம்ப் சூளுரைத்து 48 மணிநேரத்திலும், அமெரிக்காவின் ஒபரேஷன் எபிக் பியூரி (Operation Epic Fury) படை நடவடிக்கையின் ஐந்தாம் நாளிலும் இந்தக்கலம் இலங்கைக் கடல் எல்லைக்கு வெளியே வலப்பக்கமாகச் சரிந்து மூழ்கிவரும் நிழற்படத்தின் பின்னணியில் சில சாத்தியப்பாடுகள் உள்ளன.
ஆனால், இந்தப் போர்க்கப்பல் மூழ்கிய செய்தியில் இயந்திரக் கோளாறு குறித்த ஊகங்கள் அல்லது காரணங்கள் அநேகமாக இரண்டாம் பட்சமானவையாகத்தான் இருக்க முடியும்.
ஒன்றில் இந்தக் கப்பல் மீது மர்மத் தாக்குதல் வெளிப்புறத்திலிருந்து நடத்தப்பட்டிருக்க வேண்டும் அதுவும் இல்லையேல், ஈரானுக்கு வெளியே ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் தனியனாக உள்ள இந்தப் போர்க்கப்பலில் இருந்தால் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில், அதில் இருந்தவர்களில் யாராவது ஏதாவது செய்து கப்பலிலிருந்து தாம் தப்பி வெளியேறும் வகையில் ஒரு நாசவேலை நிலையை உருவாக்கியிருக்கக்கூடும்.
எனினும், முதன்மைக் காரணமாக இந்தக் கலம் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் பிராந்தியப் படையணியால் இலக்கு வைக்கப்பட்டிருக்கவும் கூடுமென்ற ஐயங்கள் உள்ளன.
இந்தக் கப்பல் தாக்கப்பட்டதா எனச் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் வினா எழுப்பினாலும் அரசாங்கத்திடம் பதில் இருக்காது.
மாறாக, இந்தக் கப்பல் தமது கடற்பரப்புக்குக் கொஞ்சம் வெளியே மூழ்கியதாக அது சொல்லியது.
இந்தச் செய்தியை எழுதும் நேரத்தில் மூழ்கிவரும் இந்தப் போர்க்கப்பலிலிருந்து 35 ஈரானியக் கடற்படையினர் சிறிலங்காக் கடற்படையால் மீட்கப்பட்டுத் தென்பகுதி காலியின் கராப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தாம் ஈரானியக் கடற்படையினரை மீட்டமை குறித்து அமெரிக்கா சீற்றமடையக் கூடாது என்பதற்காக இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை எனச் சிறிலங்கா சொல்லியுள்ளது.
இந்தக் கப்பலில் 180 ஈரானியக் கடற்படையினர் இருந்த நிலையில் இதுவரை 35 பேரே மீட்கப்பட்டுள்ளதால் மிகுதிப் பேருக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.
ஆகமொத்தம் டெனா (Dena) மலைச்சிகரத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டு 2021 இல் களமிறக்கப்பட்ட இந்த டிஸ்ட்ராயர் (Destroyer) ரக, அதாவது நாசகாரிக்கப்பல் தரையிலிருந்து வானுக்குப் பாயும் ஏவுகணைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் எல்லாவற்றையும் கொண்டிருந்தாலும் இன்று இலங்கைக்கு அப்பால் இது கடற்சமாதியாகியுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியக் கடற்பரப்புக்கு வெளியே நேரம் பார்த்துச் செய்யப்பட்ட சம்பவமாக இந்த மர்ம மூழ்கடிப்பு நடந்த நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னிருந்த நிலவரங்களை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |