சிறிலங்கன் எயார்லைன்ஸ் குறித்து அநுரவின் அதிரடி அறிவிப்பு
சிறிலங்கன் விமான சேவை (Sri Lankan Airlines) நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தொடர்புடைய தரப்பினரை அறிவுறுத்தியுள்ளார்.
விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர்கள் குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (20) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, ”கூட்டுப் பங்களிப்பு இல்லாமல் சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தை கட்டியெழுப்ப முடியாது.
வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு
விமான சேவை நிறுவனத்தின் செயற்பாட்டுச் செலவுகளுக்காக தொடர்ந்தும் திறைசேரியிடமிருந்து நிதியைப் பெற முடியாத சூழலில், நிறுவனத்திற்குள்ளேயே நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் அதிகாரத் தரப்பு என்றவகையில், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்குத் தேவையான அனைத்து அர்ப்பணிப்புகளையும் செய்வதுடன் சிறிலங்கன் விமான நிறுவனத்தைக் கட்டியெழுப்புவது அதன் அனைத்து ஊழியர்களின் பொறுப்பாகும்.
இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது, இது இலங்கை மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப் பணம் என்பதால், அந்தப் பணத்தை செயற்திறன் மிக்க வகையில் பயன்படுத்துவது அனைத்து ஊழியர்களின் பொறுப்பாகும்” என தெரிவித்தார்.
வலியுறுத்தப்பட்ட விடயம்
அத்துடன் சிறிலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்திடம் தக்கவைத்துக் கொள்வதற்கு எடுக்கப்பட்ட கொள்கை தீர்மானத்துக்கு இணங்கியது என்ற வகையில் பணிப்பாளர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்தின் இலக்குகளை அடைவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, நிதிப் பாய்ச்சல் முகாமை மற்றும் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் சிறிலங்கன் விமான சேவையை, இழப்பு அல்லாத நிறுவனமாகக் கட்டியெழுப்ப, தொடர்புடைய அனைத்து தரப்பினரினதும் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பின் தேவை குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
