ரணில் தலைமையில் அடுத்த திட்டத்தை வகுக்கும் ஐதேக!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினுடைய ஆலோசனைக்கமைய கட்சியின் கொள்கைகளை வகுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara ) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐக்கிய தேசிய கட்சியின் முழு நேர அரசியல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பிரதானமான 4 துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஒரே சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இளைஞர் அமைப்பு, பெண்கள் அமைப்பு, உள்ளூராட்சி தொகுதிகளில் மக்கள் சந்திப்புக்களை நடத்துதல் மற்றும் ஆரம்ப மட்டத்திலுள்ள உறுப்பினர்களின் வேலைத்திட்டம் என்பவற்றை ஐக்கிய தேசியக் கட்சி ஒரே நேரத்தில் முன்னெடுக்கின்றது.
ஆரம்ப மட்ட அரசியல் செயற்பாடுகள் ஆரம்பமானதுடன், தொகுதி மட்டத்தில்
பொறுப்புக்களை ஒப்படைக்கும் புதிய அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தும்
வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.