தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் மாற்றங்கள்! இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அந்த வகையில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெற்றிருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று அல்லாதவர் என உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட தேவையில்லை என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு 14 நாட்களின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு, பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்றல்லாதவர் என கண்டறியப்படுபவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி வெளியேற அனுமதிக்கப்படுவர்.
இதனுடாக, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்றவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.
எனினும், தொற்று உறுதிசெய்யப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
அதேவேளை, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இந்த நடைமுறை செல்லுபடியாகாது.
அவ்வாறே, இலங்கைக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பிரஜைகள் மற்றும் அந்நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்று திரும்பியவர்கள் இந்த நடைமுறைக்குள் உள்வாங்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.