ட்ரம்பின் அறிவிப்பால் அதிகரித்த பதற்றம்! ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை
அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அண்மைகாலமாக இராஜதந்திரத் தீர்வை எட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலில் தாக்கிய ஈரான்
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம், ஏனெனில் அவர்களைத் தாக்குவது இப்போது நமது முறை. அது வரப்போகிறது என்பது அவர்களுக்கும் தெரியும்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் கூற்றுப்படி, அப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகளை இலக்கு வைத்து ஈரான் இரவோடு இரவாக ஏவுகணைகளை ஏவியது.எனினும், அவை அனைத்தும் இடைமறித்து அழிக்கப்பட்டன.
வழக்கமாக அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகே ஈரான் பதிலடி கொடுத்து வந்த நிலையில், இம்முறை ஈரானே முதலில் தாக்குதலைத் தொடங்கியிருப்பது வழக்கமான போக்கிலிருந்து மாறுபட்டுள்ளதுடன், போரை மீண்டும் தொடங்க ஈரான் முற்படுவதையும் காட்டுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிகக் கடுமையான தாக்குதல்
மேலும் பதிலடி குறித்துப் பேசிய ட்ரம்ப், “பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அவர்கள் நம்மிடம் கேட்டுக்கொள்கிறார்கள்” எனக் குறிப்பிட்டதுடன், ஈரானின் ஏவுகணைகள் அனைத்தும் தரையிலேயே வீழ்த்தப்பட்டுவிட்டதாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் உடன்பாட்டை எட்ட முடிகிறதா என்று பார்க்கவுள்ளதாகவும், ஆனால் அதற்குள் அவர்களை தாங்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |