பிரித்தானிய எம்.பிக்களுக்கு இஸ்ரேலின் அதிரடி தடையால் பதற்றம்
பிரித்தானியாவின் (UK) இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய மறுப்பு தெரிவித்து இருப்பது ராஜதந்திர உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இஸ்ரேலுக்கு சென்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேல் தடுத்து வைத்ததோடு, அவர்களின் நுழைவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
தொழிலாளர் கட்சி (Labour Party) எம்.பி.க்களான யுவான் யாங் (Yuan Yang) - ஏர்லி மற்றும் வூட்லி தொகுதி பிரதிநிதி மற்றும் அப்திஸாம் முகமது (Abtisam Mohamed) - ஷெஃபீல்ட் சென்ட்ரல் தொகுதி பிரதிநிதி ஆகிய இரு பெண் உறுப்பினர்களுக்கே இஸ்ரேல் நுழைவினை மறுத்துள்ளது.
இஸ்ரேலின் செயல்
இது குறித்து பிரித்தானிய வெளியுறவு மந்திரி டேவிட் லாமி(David Lammy) வெளியிட்ட அறிக்கையில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இத்தகைய முறையில் நடத்துவது ஏற்புடையது அல்ல என்பதை இஸ்ரேல் அரசாங்கத்தில் உள்ள தனது சக ஊழியர்களிடம் தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் சந்தேகம்
மேலும், பிரித்தானிய அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு காசா பகுதியில் சண்டை நிறுத்தம் ஏற்படுவதையும், பிணைக்கைதிகளை விடுவிப்பதையும், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தான் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இஸ்ரேலிய குடிவரவு அமைச்சகம் (Israeli immigration ministry) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த எம்.பி.க்கள் "பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளை ஆவணப்படுத்தவும், இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பவும்" திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
