காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுமதிப்பதாக ஏமாற்றும் இஸ்ரேல்
காஸாவுக்குள் (Gaza) உணவுப் பொருள்களை அனுமதிப்பதாக இஸ்ரேல் (Israel) கூறுவது ஏமாற்று வேலை என்று சா்வதேச தொண்டு அமைப்பான “எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவா்கள்” அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் அவசரக்கால ஒருங்கிணைப்பாளா் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், தெரிவித்துள்ள அவர், “காஸாவுக்குள் உணவுப் பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறுவது, முழுமையான முற்றுகையை தாங்கள் நீக்கிவிட்டதாகக் காட்டிக் கொள்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏமாற்று வேலை.
இஸ்ரேல் அனுமதி
அங்கு வசிக்கும் 24 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் அனுமதிக்கும் நிவாரணப் பொருள்கள் போதவே போதாது.
மிகச் சொற்பமாக உணவுப் பொருள்களை அனுமதிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை, காஸா மக்களை பட்டினிச் சாவுக்கு உள்ளாக்குவதாக சா்வதேச நாடுகள் கூறுவதில் இருந்து தப்பிக்கும் உத்தி.
உண்மையில், காஸா மக்களை இஸ்ரேல் குற்றுயிரும் குலையுருமாகத்தான் வைத்திருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பட்டினி
காஸா பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளமையினால், போரில் பட்டினியை ஓா் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும், இது சா்வதேச சட்டங்களுக்கு எதிரான போா்க் குற்றம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, காஸாவுக்குள் உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இருந்தாலும், இந்த அறிவிப்பு வெறும் ஏமாற்று வேலை எனவும், மிகச் சொற்பமான அளவிலேயே உணவுப் பொருள்களை இஸ்ரேல் அனுமதிப்பதாகவும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவா்கள் அமைப்பு குற்றச்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
