யாழில் வெடித்த சர்ச்சைக்கு முடிவு : அசைவ உணவகத்தில் ஏற்பட்ட மாற்றம்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) நல்லூர் ஆலய சூழலில் புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவகம் தற்போது சைவ உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில் அங்கு சைவ உணவுகள் பரிமாறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உணவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் ''Serving a vegetarian menu''என குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்காம் இணைப்பு
யாழ்.நல்லூரில் முளைத்த சர்ச்சைக்குரிய அசைவ உணவகம் - அகற்றப்பட்ட விளம்பரப்பலகை
யாழ். நல்லூர் ஆலய வீதியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை அகற்றப்பட்டுள்ளது.
பாரிய சர்ச்சையை கிளப்பி இருந்த குறித்த உணவகத்தின் விளம்பரப்பலகை இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அகற்றப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி ஆலய பக்தர்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களடங்கிய மகஜர் யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆலய பக்தர் ஒருவரின் தன்னார்வ முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையில் 450ற்கும் மேற்பட்டவர்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்தனர்.
குறித்த கையொப்பங்கள் அடங்கிய மகஜர் யாழ் மாநகர சபை அலுவலகத்தில் வைத்து மாநகர சபை ஆணையாளர் கிருஷ்ணேந்திரனிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது.
இதன்போது சிவகுரு ஆதீனத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சைவ சமய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
குறித்த மகஜரின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், நல்லூர் பிரதேச செயலாளர், இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
யாழ். நல்லூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடும் படி அல்லது தூய சைவ உணவகமாக மாற்றும் படியான கோரிக்கை மகஜர் யாழ். மாநகரசபை ஆணையாளரிடம் கையளிக்கப்பட உள்ளது.
நல்லூர் சைவ மக்களின் ஏற்பாட்டில் பலரது கையெழுத்துக்களுடன் இம் மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
நாளை 21.05.2025 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் மகஜரை கையளிப்பதற்காக அனைத்து சைவ மக்களையும் நல்லூர் ஆலய முன்றலிற்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, நல்லூரானது சைவ சமயத்தின் புனிதத் தலமாக கருதப்படுகின்ற நிலையில் தலத்துக்கு அருகிலே அசைவ உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு (Nallur Kandaswamy Kovil) அண்மையில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளருக்கு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நல்லூர் ஆலயத்தின் சூழமைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாமிச உணவகம், சைவ மக்களின் மனங்களுக்கும், ஆன்மீக உளவியலுக்கும் மதிப்பளிக்காமல் நடத்தப்படுவது குறித்து மக்கள் எமக்கு முறையிட்டு வருகின்றார்கள்.
முற்றாகத் தடை விதிக்குமாறு கோரிக்கை
சைவ மக்களின் ஆன்மீக உளவியலுக்கு இடையூறை ஏற்படுத்தும் குறித்த மாமிச உணவகத்தில் மாமிச உணவு தயாரிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றாகத் தடை விதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்.மாநகர சபைக்கு முன்பாக நல்லூர் கந்தசுவாமி பெருந்திருவிழா காலத்தில் முதலாவது உற்சவகால வீதித்தடை அமைக்கப்படும் இடத்தில் குறித்த அசைவ உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெருந்திருவிழா காலத்தில் நல்லூர் கந்தனின் அருளாசி வேண்டி நல்லூர் காவடிகள் அணிவகுத்து நிற்கும் வீதிக்கு அருகில் இவ்வாறான கடைகள் ஏற்புடையது அல்ல என பொதுமக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்
மேலும், நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலயம் அமைந்திருக்கின்ற சுற்றுவட்டப் பகுதிக்குள் ஒரு அசைவ உணவகம் ஆரம்பிப்பது என்பது ஏற்புடையதாக இல்லை என்றும் அது சுற்றி வட்டத்திற்குள் பல அசைவ உணவங்களை தோற்றுவிப்பதற்கான விதையாகவும் அமைந்துவிடும் என யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளார்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


