சமூக ஊடகங்களால் பாதிக்கப்படும் தமிழரசுக்கட்சி எம்.பி
சமூக ஊடகங்களுக்குரிய சட்டங்களை கொண்டு வரத்தான் வேண்டும் சமூக ஊடகங்கள் என்றால் அதற்கு ஒரு வரையறை இருக்கத்தான் வேண்டும் அதிகளவு சமூக ஊடகங்கள் ஊடாக நான் பாதிக்கப்படுகின்றவன் என்ற அடிப்படையில் சமூக ஊடகங்களுக்குரிய வரையறை இருக்கத்தான் வேண்டும்.
சமூக ஊடகங்களில் பல நல்லவைகள் இருக்கத்தான் செய்கின்றன. சமூக ஊடகங்களை பாவித்து நன்மை அடைந்தவர்கள் இருக்கின்றார்கள், பாதிக்கப்படுபவர்களும் இருக்கின்றார்கள்.
நிகழ்நிலை காப்புச் சட்டம்
அந்த வகையில் சமூக ஊடகங்களை ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு சட்டத்திற்கு கொண்டு வரத்தான் வேண்டும். ஆனால் நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பது அதற்குரிய பதிலீடா என்று கேட்டால் அது இல்லை என்று தான் கூறுகின்றேன்.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பிரகடனம் 2.0 சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஜனநாயக மதிப்புகள் தொடர்புடைய சிக்கல்கள் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் திட்டம் மட்டக்களப்பு - கல்லடி தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை(04.10.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இலட்சுமணன் தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடுமையாக கருத்துக்களை தெரிவித்து செயல்பட்டவர்கள்
நிகழ்நிலை காப்புச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தபோது அதற்கு எதிராக நபடாளுமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும், மிகக் கடுமையாக கருத்துக்களை தெரிவித்து செயல்பட்டவர்கள் நாங்கள்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தில் இருக்கின்ற மிகவும் ஆபத்தான விடயம் என்னவெனில் அதற்காக ஒரு ஆணைக் குழு ஒன்று நியமித்திருக்கின்றார்கள். அந்த ஆணைக் குழுவின் பிரதிநிதிகளை ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் நியமிப்பார்.
அந்த ஆணைக்குழு நாட்டிலே இருக்கின்ற சமூக ஊடகங்களை கையாளுமாக இருந்தால் அது ஒரு அபாயகரமாக இருக்கும் என்பதற்காக நாங்கள் அதனை மிகவும் கடுமையாக எதிர்த்து இருந்தோம். ஆகவே அதற்கு மாற்று வழியாக நாங்கள் கூறியது அதற்கு சட்டரீதியாக ஒரு வழிவகையை வழங்குங்கள் என நாங்கள் தெரிவித்து இருந்தோம்.
ஒருவர் சமூக ஊடகத்தில் இன்னும் ஒருவரை பற்றி அவதூறாக தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கு ஆணைக் குழுவுக்கு பதில் வழங்கும் அதிகாரத்தை கொடுக்காமல் மாறாக நீதிமன்றத்தை நாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் என நாங்கள் கேட்டிருந்தோம்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரும்போது நிகழ்நிலை காப்பு சட்டத்தை நீக்குவோம் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தார்கள். அதுபோல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவோம் எனவும் தெரிவித்திருந்தார்கள். இப்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு பதிலாக பிறிதொரு சட்டத்தை கொண்டு வருவதாக தெரிவிக்கின்றார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் நிகழ்நிலை காப்புச் சட்டத்தையும் இவ்வாறு நீக்காமல் அதற்கும் மாற்றாக இன்னும் ஒரு சட்டத்தை கொண்டு வருவார்கள் என நாங்கள் நினைக்கின்றோம் அந்த வகையில் எங்களுடைய கருத்துக்களை அதில் கொடுக்கக்கூடிய நிலைமை வரவேண்டும்.
எனவே இது ஒரு மிகவும் முக்கியமான விடயம். பொறுப்பு வாய்ந்த சமூக ஊடகங்கள் தொடர்பான சட்டத்தை கொண்டு வருவதற்கு எங்களுடைய முழுமையான ஆதரவும் முழுமையான ஒத்துழைப்பும் இருக்கும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
