சங்கு கூட்டணியை அரசியலில் இருந்து அகற்ற பாடுபடும் தமிழரசு : கருணாகரம் பகிரங்கம்
வடக்கு கிழக்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அரசியல் அரங்கில் இருந்து அகற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழரசு கட்சியினர் செயற்படுகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (Govinthan Karunakaran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”2001 ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது உருவாகியது. 2009ஆம் ஆண்டுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் இருந்தது.
படு மோசமான முரண்பாடு
இந்த ஆயுத போராட்டம் மௌனிப்பட்டதன் பின்பு அரசியல் ரீதியாக போராடிய கட்சிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டு ஒரு திக்கு திசை தெரியாத நிலையிலே கட்சிகளும் மக்களும் இருந்து கொண்டிருக்கின்றனர்.
பல முரண்பாடுகளுக்கு மத்தியில் இருந்த போராட்ட இயக்கங்கள் ஒன்று சேர்ந்தது ஆனால் 2023ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் படு மோசமான முரண்பாடு உருவாகியது.
முதன்மை கட்சியாக இருந்த தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறியது. இப்போது அவர்கள் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவோம் தேர்தல் முடிந்ததும் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைப்போம் என்ற கோஷத்துடன் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்துள்ளார்கள் என்பது தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
2001க்கு முன்பு பல முரண்பாடுகள் இருந்த போராட்ட இயக்கங்கள் ஒன்றாகும் போது இந்த உள்ளூராட்சி மன்ற தோர்தலின் பின்பு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து ஆட்சி செய்ய கூடிய உள்ளூராட்சி மன்றங்களில் குழப்பங்களை உருவாக்கியுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
2023ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து தேர்தலின் பின்னர் ஒன்றாகுவோம் என கூறியவர்கள் 2025 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகளை புறக்கணித்து எப்படியாவது அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் ஒப்பந்தம் செய்ததுடன் ஜக்கிய மக்கள் சக்தியுடனும் காலம் காலமாக மாறிமாறி இலங்கையை ஆட்சி செய்த பேரினவாத சக்திகளுடன் சேர்ந்து ஆட்சி நடாத்திய ஈபி,டி.பி டக்ளஸ் தேவானந்தாவுடனும். கடந்த அரசாங்கத்தில் மதுபானசாலைக்கான அனுமதி பெற்றுக் கொண்டார் என்பதற்காக மிகவும் மோசமாக விமர்சித்த சி.வி. விக்கினேஸ்வரனுடன் கூட்டு சோர்ந்துள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வடகிழக்கில் 106 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி அவர்களை தேடிச்சென்று பேசும் போதும் கூட எங்களை உதாசீனம் செய்கின்றனர்
அவர்களுடைய நோக்கம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற ஒரு அமைப்பை வடக்கு கிழக்கில் அரசியல் அரங்கில் இருந்து அகற்றவேண்டும் என்பது தான்.
தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் மன்னாரிலே வடக்கு கிழக்கிலே இருக்கும் உள்ளூராட்சி மன்றங்களிலே கூடுதலான ஆசனங்களை பெற்றிருக்கும் தமிழரசுக் கட்சிக்கு ஏனையவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் அதுதான் ஜனநாயகத்தின் தார்மீகம் என்று ஆவேசமாக கத்தினார்.
ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சி
ஆனால் ஊர்காவற்துறையிலே, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழரசு கட்சியை விட கூடுதலான ஆசனத்தை பெற்றுள்ளனர். அவர்களுக்கு நீங்கள் கூறுவதைப்போல் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு நீங்கள் ஆதரவு வழங்கினீர்களா? இல்லை அதற்கு எதிராக ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க முயற்சிக்கின்றீர்கள்.
அதேபோல சாவகச்சேரி நகரசபை, பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை போன்ற சபைகளில் கூடுதலான ஆசனங்களை பெறும்போது அவர்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என நீங்கள் கூறுவது போல நடக்கவில்லை.
எனவே உங்களுக்கு வசதியாக கூறுவது மட்டும் தான் ஒரு நீதி என்றால் ஏனையவர்களுக்கு ஜனநாயகம் இல்லையா? திருகோணமலை நகரசபை, மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கணிசமான ஆசனங்களை பெற்றுள்ளது நாங்களும் நீங்களும் சேர்ந்தால் ஆட்சி அமைக்கும் நிலையில் எங்களை உதாசீனம் செய்துவிட்டு அந்த ஆட்சி அதிகாரத்தை ஏனையவர்களுடன் சேர்ந்து பிடிக்க முயன்று தோற்றுப் போய் இன்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கோரிக்கை அனைத்துக்கும் இணங்குவதாக அவர்கள் வரவேண்டும் என பொது வெளியில் தெரிவிக்கின்றீர்கள்.
எதற்காக இந்த தமிழரசுக்கட்சி தலைமை எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இணைந்து செயற்பட வேண்டும்.
அதுதான் எங்கள் மக்களுக்காவும் உயிர்நீத்த போராளிகளுக்காகவும் எமது இனம் சுயாட்சியுடன் சுயநிர்ணய உரிமையுடன் மது தாயக்தில் வாழ்வதற்கு நாங்கள் செய்யும் கடமையாக இருக்கவேண்டும். அதற்கு நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாக ஒன்றாகவேண்டும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
