யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்- சந்தேக நபர்கள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது அண்மையில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தம்மிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த மாதம் 10 ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.
அதனையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில், உடுவில் மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்ட போது, தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும், தாக்குதல் நடத்துமாறு தமக்கு வெளிநாட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் வாக்கு மூலத்தில் தெரிவித்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதனை அடுத்து , யாழில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு தொடர்பிருக்கா என காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You May Like This