ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோர்க்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு இராணுவத்தினரால் விசேட வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோர் தமக்குரிய கொடுப்பனவினை வங்கிகளில் பெறவுள்ள நிலையில் தற்போதுள்ள பயண தடையின் காரணமாக ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவோர் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இராணுவத்தினரால் வாகன ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
எனவே யாழ் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோரில் வாகன வசதி தேவைப்படுவோர் தமது கிராம சேவகருடன் தொடர்புகொண்டு பிரதேச செயலர் ஊடாக தமக்கென ஒதுக்கப்பட்ட வாகனங்களில் பயணித்து ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
தற்போது உள்ள இடர் நிலையை கருத்தில்கொண்டு முதியோர்க்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் முகமாகவும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாகவும் இராணுவத்தினரால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.