தமிழரின் ஏக பிரதிநிதிகளுக்கு நடந்தது என்ன - ஈ.பி.டி.பியிடம் ஆதரவுக் கரம் கோரும் தமிழரசுக் கட்சி!
யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரினார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஆதரவைக் கோரும் தமிழரசுக்கட்சி
மேலும் அவர்,
"கடந்த காலத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஆதரவு கேட்டு, யாழ் மாநகர சபையில் ஆதரவு வழங்கிய போதும் பின்னர் அதனை மறுத்திருந்தனர்.
கடந்த காலங்களில் யாழ் மாநகர சபை தொடர்பான விடயங்களில் சீ.வீ.கே.சிவஞானம், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே எம்முடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டிருந்தனர்.
ஆனால் இம்முறை நடந்த மாநகர முதல்வர் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஆதரவு கோரினார்.
கடந்த கால விடயங்களை கருத்திற்கொண்டு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் ஆதரவு கோரினால் அது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என்றோம், ஆனால் அதற்கு அவர் உடன்படவில்லை.
இலங்கை தமிழரசுக்கட்சி எம்மிடம் உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் ஆதரவு கோரினால் அது தொடர்பாக சாதகமாக பரிசீலிக்க முடியும்." என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
