யாழ். மாநாகர சபை முதல்வர் பதவி...! உண்மையை உடைக்கும் மணிவண்ணன்
யாழ். மாநாகர சபை முதல்வர் பதவி என்பது சாதாரணமான பகிடிவிடும் பதவி இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் (Viswalingam Manivannan) தெரிவித்தார்.
ஆனால் துரதிஷ்டவசமாக தற்போது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் தகுதியான மாநாகர சபை முதல்வரை கண்டுகொள்ள முடிவில்லை என்பது தான் உண்மை என்றும் வி.மணிவண்ணன் சுட்டிக்காட்டினார்
யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் இன்று (08.05.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிட்ட நமக்கு மக்கள் பெரும் ஆதரவை தந்துள்ளார்கள். இனிவரும் தேர்தல்களில் நாம் புத்தெழுச்சியுடன் போட்டியிடுவோம்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் நாம் தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக மான் சின்னத்தில் போட்டியிடுவதற்காக யாழ் . மாவட்டத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தோம்.
அவற்றில் சிலது நிராகரிக்கப்பட்ட நிலையில் 07 சபைகளில் போட்டியிட்டோம். விதியோ சதியோ தெரியவில்லை எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையால் , நாம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டோம்.
தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி
அந்த முயற்சியும் தோல்வியடைந்தமையால் , நாம் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக வெறும் 11 நாட்களே செலவு செய்தோம்.
குறுகிய கால பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும் சிறப்பான அடைவுகளை பெற்றுள்ளோம். நல்லூர் பிரதேச சபையில் 06 ஆசனங்களும், காரைநகர் பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் பெற்றுள்ளோம்.
அங்கு தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய நிலைமை காணப்படுகிறது. அவ்வாறு ஆட்சி அமைப்போம் ஆயின், அப்பிரதேச சபைகளை சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்வோம் என மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
