சைனைட் குப்பிகளையும் துப்பாக்கிகளையும் ஏந்திய இளைஞர்களை புத்தகங்களை ஏந்த வைத்திருக்கிறோம் - இராஜாங்க அமைச்சர் பேச்சு
வட மாகாணத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் இளைஞர்கள், சைனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு சென்றனர். ஆனால் தற்போது புத்தங்களை படிக்கவும், பேனாவை பிடித்து எழுதுகின்ற நிலைமைக்கும் இளைஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளளார்.
மேலும் இவ்வாறான நல்லெண்ணத்தினை உருவாக்கியவர்கள் தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் என கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த(sanath Nishantha) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் கருத்திட்டத்திலான தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வறுமைக் குறைப்பிற்கான ஜப்பான் நாட்டு நிதியுதவில் மின்சார விநியோகத்தை அதிகரிக்கும் உதவித் திட்டத்தின் கீழ் நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கு நன்னீர் குடிநீரை வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று யாழ். நயினாதீவில் உள்ள 07 ஆம் வட்டராத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த கலந்துகொண்டு உத்தியபூர்வமாக திரை நீக்கத்தினை செய்து வைத்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
வட மாகாணத்தில் பிரதான தேவையாக இருந்தது, குடிநீர் திட்டம். அது 52 சதவீதமாக கடந்த 30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் இருந்துள்ளது. மேலும் சில ஆண்டுகளில் 60 சதவீதமாக காணப்பட்டது. எனவே, எமது அரசாங்கம் என்ற ரீதியாக 100 சதவீதமான நன்நீர் குடிநீர் திட்டத்தினை குடிநீர் இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
ஆனால் அது 06 வீதமாக உள்ளது. யாழ். மாவட்டத்தில் குடிநீர் இல்லாதவர்களுக்கான நீர்வழங்கல் திட்டம் 04 வீதமாகவே காணப்படுகின்றது. எனவே 2025 ஆம் ஆண்டில் நிறைவான குடிநீரை வழங்க வேண்டும். என்பது பிரதமர் மற்றும் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி அமைச்சின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. மேலும் செல வுகுறைந்த நீர் விநியோகத் திட்டத்தில் சில இடையூறுகள் இருந்தது.
அதனை அமுல்படுத்தவிடாமல் கடைசியாகவும் செயற்படாமல் இருந்தது. அதனால் மக்களுக்கு வழங்கும் நீர் விநியோகத்தில் இடையூறு காணப்பட்டது. எனவே, அதுவும் ஒரு யூனிற்றுக்கு 54 ரூபாவாக நீரை பெற்றுக்கொள்ளுவதற்கான கட்டணமாக இருந்தது. அது தற்போது எமது அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு 10 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் யாழ். மாவட்டத்தில் குடிநீர் இல்லாதவர்களுக்கான குடிநீரை 100 சதவீதமாக பெற்றுக் கொள்ளுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவர் மாவட்ட பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சாள்ஸ், வட மாகாண பிரதம செயலாளர் சரத்பத்துல மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் கலந்து கொண்டனர்.