தமிழரசுக்கட்சி வசமானது பருத்தித்துறை பிரதேச சபை!
புதிய இணைப்பு
பருத்தித்துறை பிரதேச சபையின் (Point Pedro Pradeshiya Sabha) புதிய தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவாகியுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (17) பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
20 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை பிரதேச சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், சுயேட்சை குழு 2 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட உதயகுமார் யுகதீஸ் தவிசாளராகவும் பிரதி தவிசாளராக முன்மொழியப்பட்ட கனகரத்தினம் ஶ்ரீகாந்தருபனும் ஏகமனதாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் குமாரசாமி சுரேந்திரன் தெரிவாகியுள்ளார்.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (17) வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
32 உறுப்பினர்களை கொண்ட வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 4 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றியது.
இரகசிய வாக்கெடுப்பு
இன்று நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்கவில்லை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக வெளிநடப்பு செய்வதாக அறிவித்த நிலையில் 32 உறுப்பினர்களில் 25 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்றதுடன் 7 பேர் பங்கேற்கவில்லை.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட குமாரசாமி சுரேந்திரன் 13 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தம்பையா சிவராசா 12 வாக்குகளையும் பெற்ற நிலையில் தவிசாளராக குமாரசாமி சுரேந்திரன் தெரிவாகினர்.
பின்னர் உப தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடத்தப்பட்டதில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தியாகராசா தயாபரன் 14 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கந்தன் பரஞ்சோதி 11 வாக்குகளையும் பெற்றனர்.
இறுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தியாகராசா தயாபரன் உப தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ். பருத்தித்துறை நகர சபையில் ஆட்சி அமைக்கும் சைக்கிள் அணி
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (All Ceylon Tamil Congress) கட்சியின் உறுப்பினர் வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜீவநந்தினி பாபு தலைமையில் தவிசாளர் தெரிவுக்காக இன்று (17) நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் 7 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார்.
தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் தி.சந்திரசேகர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போல் ஆகிய இருவர் முன்மொழியப்பட்டிருந்தனர்.
ஈபிடிபி வெளிநடப்பு
இந்த வாக்கெடுப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் பரான்சிஸ் ரட்ணகுமார் வெளிநடப்பு செய்ததுடன் மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம்பெற்ற நிலையில் 7/3 என்ற அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தேவசிகாமணி தேவராசேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam), ஜனநாயக போராளிகள் கட்சியின் யாழ் மாவட்ட தலைவர் ஆ.சுரேஸ்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
