3 முட்டாள்களான மும்மூர்த்திகளின் ஆட்சியினால் நாடு அதளபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது!
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் யாழ் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தற்போதைய ராஜபக்ஷாக்களுடைய அராசாங்கத்தின் மக்கள் மீதான அடக்குமுறைகள் துரிதமடைந்து கொண்டிருக்கின்றன. இதற்கான எடுத்துக்காட்டாக இன்று நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டமையைக் குறிப்பிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலவசக் கல்விக்குச் சாவுமணி அடிக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான முஸ்தீபுகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2/3 பெரும்பான்மை உள்ளதால் ராஜபக்ஷாக்களின் அரசாங்கமானது எதேச்சதிகாரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. கொரொனாவையும் தனிமைபடுத்தல் சட்டத்தையும் பிரயோகித்து மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களையும் அடக்குமுறைகளையும் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதையும் இலகுவாக மேற்கொண்டு வருகிறது.
தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எந்தவொரு வாக்குறுதியையும் இந்த அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்றவில்லை. நாட்டின் பொருளாதாரமானது மிகுந்த சீரழிவின்பால் இட்டுச்செல்லப்பட்டிருப்பதோடு மக்களின் அன்றாடச் ஜீவனோபாயமும் மிகவும் பரிதாபமாக முடக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் ஈவிரக்கமின்றி அதிகரிக்கப்படுகின்றன. எண்ணெய விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகச் சந்தையில் எண்ணெய விலையில் அதிகரிப்பு ஏற்படும்போது அதை நிவர்திச் செய்வதற்கான ரூ 20 ஆயிரம் கோடி எண்ணெய் கட்டுபாட்டு நிதியத்தை அமைத்து மக்களுக்கு மானியம் தருவதாக கூறப்பட்டது.
ஆனால் இன்று அந்த நிதியத்துக்கு நேர்ந்த கதி என்னவென்று யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது. உரம் இலவசமாக வழங்குவோமெனக்கூறி இந்நாட்டு விவசாயிகளின் அதிகளவு வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்த இவ்வரசாங்கம் அவ்வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அதனால் இன்று நாட்டு மக்கள் ஏதாவது ஒரு உரத்தை தா என அரசாங்கத்திடம் கேட்டுப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அதற்கும் செவிமடுக்காத அரசாங்கம் அவர்கள் மீது அடக்குமுறையை க் கட்டவிழ்விட்டுள்ளது. எங்கேயோ சென்றுக்கொண்டிருந்த கப்பலை இரண்டு நாடுகள் தமது துறைமுகத்திற்கு வரவேண்டாமென அனுமதி மறுத்தபோதிலுங்கூட அந்தக் கப்பலை எமது நாட்டுக்கு வரவழைத்து எமது கடல் வளம் சமுத்திர வளம் ஆகியவற்றை நாசப்படுத்திய இவ்வரசாங்கம் மீன்வர்களின் வாழ்வாதாரத்திற்குச் சாவுமணி அடித்து சாதனை படைத்துள்ளது.
இந்நாட்டின் கடல்வளத்தைச் சற்றேனும் கருத்திற்கெடுக்காமல் ‘டொலர்’ ஒன்றுக்காவே அரசாங்கம் இவ்வாறான நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கொரொனா நோயாளிகளிகளை காப்பாற்றுவதற்காக அல்லும் பகலும் அயராது சேவையாற்றும் வைத்தியர்கள் தாதியர் மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் தேவைகளை நிறைவேற்றாததுமட்டுமல்ல அவர்களின் கோரிக்கைளையும் கிடப்பில் இட்டு அவர்களை தமது உரிமைகளை கேட்டு ஆர்பாட்டங்களில் ஈடுபடவேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது.
மக்கள் விரோத அரசாங்கமாகவுள்ள தற்போதைய அரசு உடனடியாக வைத்திய சுகாதார பகுதியினருக்குத் தேவையானவற்றையும் அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகின்றோம். அத்தோடு இலவசக் கல்வியை ஒழித்துக்கட்டுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதன் விளைவே கொத்தலாவல பல்கலைக்கழகச் சட்டமூலமாகும். ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் இச் சட்டம் அமுலாக்கப்படவிருந்ததை அன்று கடுமையாக எதிர்த்தவர்கள் ஆனால் இன்றோ அவர்களே இச் சட்டமூலத்தை கொண்டுவந்து இலவசக் கல்விக்கு சாவுமணி அடிக்கத் தயாராகி வருகின்றனர். அன்று இச் சட்டமூலத்திற்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது மாணவர் ஒருவர் உயிரிழந்துமுள்ளார்.
இலவசக் கல்வி ஒழிப்பு தனியார் வைத்தியச்சாலை போன்ற விடயங்களில் உண்மையை அறியும் உரிமை இந்நாட்டு மக்களுக்குண்டு. ஒன்லைன் கல்வி பெறும் வாய்ப்பை இந்நாட்டின் வசதியான மாணவாகள் மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடியதாகவுள்ளது. நாட்டின் பெரும்பான்மையான மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு அற்றுப்போயுள்ளது.
இப்பாகுபாட்டை நிவர்த்திச் செய்வதற்காக அரசாங்கம் கூறும் தீர்வுதான் என்ன? தேசத்தின் பௌத்த பிக்குகள் இணைந்து இவ்வாட்சியைப் பதவியில் அமர்த்தினார்கள். தற்போது ஒன்றரை ஆண்டுப் பதவிக் காலத்திற்குள்ளேயே அவர்கள் அனைவரும் அரசின் மீது அதிருப்தியடைந்து இவ்வரசை விரட்டியடிக்க வேண்டுமென்னும் அவாவோடு காணப்படுகின்றனர்.
இவ்வரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ம.வி.மு .ன் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ‘சமந்த வித்தியாரத்னா’ அகில இலங்கை விவசாயிகளின் சம்மேளனத் தலைவர் நாமல் கருணரத்னா ஆகியோர் கைதுசெயய்ப்பட்டுமுள்ளனர். இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்கா ஜாஎலலையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும்போது அரசினால் பயமுறுத்துவதோடு கொலைசெய்யவும்படுகிறார்கள். அத்தோடு காணாமல் ஆக்கபப்ட்டுமுள்ளனர். லசந்த விக்கிரமதுங்கா எக்nலியக்கொட போத்தல ஜயந்த கீத் நோயார் ஆகியோர் இவ்வரிசையில் குறிப்பிடத்தகவர்களாக விளங்குகின்றனர்.
ஒன்றரை வருடங்காளக ராஜபக்ஷாகக்ள் ஆட்சிசெய்தபோலுங்கூட நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவோ அவர்களால் முடியவில்லை. மாறாக நாட்டின் காடுகள் நாட்டின் காணிகள் உள்ளடங்கலாக சகல சொத்துக்களும் அமெரிக்கா இந்தியா சீனா போன்ற நாடுகளுக்கு விற்பனையாக்கிக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்ஷாவுக்கு மேலதிகமாக பதவிகள் வழங்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது. பசில் ராஜபக்ஷ முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தபோது கொரொனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவாக ராஜபக்ஷாக்கள் மூவரைத் தலைவர்களாகக்கொண்ட குடும்ப ஆட்சியே தற்போது இலங்கையில் நிலவுவதாக கூறலாம் ’03’ முட்டாள்களான மும்மூர்த்திகளின் ஆட்சியினால் நமது நாடு அதாளபாதளத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறதெனலாம். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முதன்மையாகக் கொண்ட ஸ்ரீலங்க பொதுஜன முன்னணி ஆட்சியாக இருந்தாலும் சரி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்னும் பேருண்மையை இந்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டம்.
ஆகவே முற்றுமுழுதான ஆட்சிமாற்றமொன்றை அதாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்த அணிதிரளவேண்டும்
இவ்வணி திரள்வுக்குத் தலைமை தாங்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணிக்குப் போதியளவு யோக்கியதன்மை உண்டு என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.