அரங்கேறும் நாடகம்: திஸ்ஸ விகாரை அமைத்தமை மகா தவறு - நயினாதீவு விகாராதிபதி அதிரடிக் கருத்து
தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்கக் கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி சிறீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாக தீப விகாராதிபதி தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று தையிட்டியில் காணிகளை இழந்தவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரை முன்னர் இருந்த இடத்தையும் திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணிகளையும் பார்வையிட்டனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நயினாதீவு விகாராதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அபகரித்து விகாரை கட்டியுள்ளனர்
அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரை இப்போது அமைந்துள்ள பகுதி தனியாருக்குச் சொந்தமான காணிகள்.

திஸ்ஸ விகாரைக்கு எனச் சொந்தமாக காணிகள் இருக்கும்போது இராணுவத்தினருடன் இணைந்து தனியார் காணிகளை அபகரித்து விகாரையை கட்டியுள்ளனர். இது மகா தவறு.
பௌத்த பிக்குகள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது. மற்றவர்களுக்கு போதனை செய்யும் நாங்கள் பிறர் பொருட்களை எடுக்கக்கூடாது என புத்தரே சொல்லி இருக்கிறார்.
தற்போது விகாரைக்காக கையகப்படுத்தியுள்ள காணிகளை நான்கு கட்டமாக விடுவிப்பதாகக் கூறி இருப்பதும் ஏமாற்று வேலையே. நான்கு கட்டம் எனக் கூறுவார்கள்.
மக்களின் போராட்டம்
பிறகு ஒவ்வொரு கட்டத்துக்கும் இடையில் நான்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாகும். எனவே விடுவிப்பதை ஒரு தடவையில் தர வேண்டும் எனக் கோரி பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த மக்களின் போராட்டம் நியாயமானது. இதனால் தான் இந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என நான் குரல் கொடுத்தேன்.
அதன் பிறகு யாழ்ப்பாண நாகவிகாரை விகாரதிபதியூம் எனது கருத்தோடு ஒத்த கருத்தை தெரிவித்தார். அதனை தொடர்ந்தே தையிட்டி விகாரதிபதியூம் ஊடக சந்திப்பை மேற்கொண்டு புதிய கட்டுமானங்களை கட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
போராட்டங்களை தடை
காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடமும் நான் கேட்டுக்கொள்வது காணியை இழந்த இந்த மக்களின் போராட்டத்துக்கு எதிராக வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும்.

இந்த மக்கள் தமது காணிகளை இழந்து வீதிகளில் நின்று போராடுகிறார்கள். அவர்களுக்கு காணிகளை கையளித்தால் அவர்கள் போராட மாட்டார்கள்.
எனவே காவல்துறையினர் போராட்டங்களை தடை செய்யாது போராடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |