யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான புதிய அறிவிப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - கொழும்பு (Colombo) தொடருந்து சேவை குறித்து யாழ்ப்பாணம் பிரதான தொடருந்து நிலைய (Jaffna railway station) அத்தியட்சகர் ரீ.பிரதீபன் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இதுவரை காலமும் வார இறுதி நாட்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி தொடருந்து சேவை எதிர்வரும் 7ஆம் திகதி முதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவை குறித்து அவர் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து திணைக்களம்
அவர் மேலும் தெரிவிக்கையில், ”பொதுமக்களால் தொடருந்து திணைக்களம் மற்றும் துறைசார் தரப்பினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் குறித்த தொடருந்து தனது சேவையை முன்னெடுத்து வந்தது.
இந்தநிலையில் எதிர்வரும் 7ஆம் திகதிமுதல் கல்கிசை தொடருந்து நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு தனது சேவையை ஆரம்பித்து கொழும்பு கோட்டையிலிருந்து 5.45ற்கு யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிப்பதுடன் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தை மதியம் 11.49ற்கு வந்தடையவுள்ளது.
அதன்பின்னர் காங்கேசன்துறையை மதியம் 12.13 அளவில் சென்றடையும். மீண்டும் மதியம் 1.30ற்கு காங்கேசன்துறையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த தொடருந்து யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திலிருந்து 2.12 ற்கு புறப்பட்டு முன்னிரவு இரவு 8.33 கொழும்பு கோட்டையை சென்றடைவதுடன் கல்கிசையை முன்னிரவு இரவு 8.55 சென்றடையும் ஒழுங்கில் சேவையை முன்னெடுக்கவுள்ளது.
யாழ் தேவி தொடருந்து சேவை
மேலும், குறித்த கடுகதி கொழும்பு கோட்டையை சேவைக்கான ஆசன முற்பதிவுகள் அடுத்த ஒருசில தினங்களில் மேற்கொள்ள முடியும். அதனை தொடருந்து திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் முன்னெடுக்க முடியும்.
இதேவேளை இதுவரை காலமும் 5.45 க்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட யாழ் தேவி தொடருந்தானது எதிர்வரும் 7ஆம் திகதிமுதல் காலை 6.35 மணிக்கு தனது சேவையை ஆரம்பிக்கும்“ என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
