யாழ்தேவி தொடருந்து சேவையில் சிக்கல் - பயணிகள் அசௌகரியம்
'யாழ் தேவி' உள்ளிட்ட பல தொடருந்துகள் இன்னும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏனைய பாதைகளிலும் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான தொடருந்துகள் இவ்வாறு இயக்கப்படாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த விடயத்தை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
தொடருந்துகளின் பற்றாக்குறை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மன்னார் மற்றும் வடக்கு தொடருந்து பாதைகளின் திருத்தப்பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன.

ஆனால், தொடருந்துகளின் பற்றாக்குறை காரணமாக தலைமன்னார் தொடருந்து மற்றும் காங்கேசன்துறை வரை பயணிக்கும் பிரதான ரயிலான 'யாழ் தேவி' ஆகியவற்றை இன்னும் இயக்க முடியாத நிலை காணப்படுகிறது.
அதேபோல், 'உத்தர தேவி' கடுகதி தொடருந்து இதுவரை சேவையில் ஈடுபடுத்த முடியவில்லை. ஏனைய பாதைகளிலும் தொடருந்துபோக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து முறையான நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்தங்கள் திணைக்கள மட்டத்தில் இல்லை. தொடருந்து பொது முகாமையாளர் முயற்சி செய்தாலும், அமைச்சு மட்டத்தில் தேவையான வசதிகள் கிடைப்பதில்லை என்பது தெரிகிறது.
பயணிகள் நாள்தோறும் கடும் அழுத்தம்
இதனால் பயணிகள் நாள்தோறும் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். மேலும், அரச ஊழியர்களின் புதிய மாதத்திற்கான பருவகால பயணச்சீட்டுகள் உரிய முறையில் தொடருந்து நிலையங்களுக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஏனைய பயணிகளுக்கான பயணச்சீட்டுகளும் சரியான நேரத்தில் வழங்கப்படாததால் தொடருந்து நிலைய அதிபர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பல நிர்வாகச் சிக்கல்கள் இருப்பதாகவும், இதனால் தொடருந்து திணைக்களம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி
எரிபொருள் நெருக்கடி நிலவும் இத்தருணத்தில், தொடருந்து போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என முன்மொழிவுகள் வழங்கப்பட்ட போதிலும், போக்குவரத்து அமைச்சர் அது குறித்து எவ்வித அக்கறையும் காட்டாமல் செயற்படுவது குறித்து அவர் தமது அதிருப்தியை வெளியிட்டார்.

மின்சார தொடருந்து திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், தற்போதுள்ள தொடருந்துகளை வழமைக்குக் கொண்டு வந்து, தொடருந்து பாதைகளை முறையாகப் பராமரியுங்கள்.
கரையோர தொடருந்து மார்க்கம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தண்டவாளங்களை மாற்றாமல், வேகக் கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பதால் எவ்வித பலனும் இல்லை அதனால் பயணிகளுக்கு ஆபத்தே ஏற்படும் என சுமேத சோமரத்ன கூறியுள்ளார்.