மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்த - ரணில் விக்கிரமசிங்க.
அனைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான இணக்கப்பாட்டை அதிபர் தெரிவித்துள்ளார்.
ஜீவனின் எதிர்பார்ப்பு
மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ள நிலையில், இந்த நிதியை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்துதல், என்பது தொடர்பான கட்சிகளின் யோசனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை மலையகத்துக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது மக்கள் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு, அவர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி செயற்படவே அமைச்சர் ஜீவன் தொண்டமான் எதிர்பார்க்கின்றார். இதற்கான அழைப்பையும் அவர் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் 9 தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
