தமிழர் தாயகத்தில் நினைவுகூரப்படும் ஊடகவியலாளர்கள் - கறைபடிந்த கருப்பு ஜனவரி
ஊடக அடக்கு முறைக்கு எதிராக முல்லைத்தீவு ஊடக அமையத்தினர் கருப்பு ஜனவரியை அனுசரித்து துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
ஜனவரி மாதம் என்பது இலங்கையில் ஊடகத்துறையைப் பொறுத்த வரையில் கறைபடிந்த மாதமாகவே காணப்படுகிறது.
பல்வேறு ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட பல்வேறு ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட இந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்றுள்ளது.
படுகொலை
கொல்லப்பட்ட கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இலங்கையில் வருடம் தோறும் ஜனவரி மாதத்தை கருப்பு ஜனவரியாக கடைப்பிடிக்கும் இலங்கையின் ஊடகவியலாளர்கள், இந்த கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி வருகின்றனர்.
அந்தவகையில் இவ்வருடமும் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் ஊடகவியலாளர்கள் கருப்பு ஜனவரியை அனுசரிக்கின்றனர்.
இதன் ஒரு அங்கமாக 2006 ம் ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களுடைய 17 ம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் முகமாகவும் 2010 ம் ஆண்டு இன்றைய நாளில் கடத்தப்பட்ட ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்களினன் நினைவாகவும் முல்லைத்தீவு ஊடக அமையத்தினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு நகர்ப்பகுதிகளில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை அரசு
குறித்த துண்டுப்பிரசுரத்தில் ''தமிழ் ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் எம்மோடு இருந்திருந்தால் அவருக்கு இன்று 53 வயதாகியிருக்கும். ஆனால், வேதனையளிக்கும் விதத்தில் 17 ஆண்டுகளிற்கு முன்னர் அவரது 36 ஆவது அகவையில் கொலையாளிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
கிழக்கு கடற்கரை நகரான திருகோணமலையில், 2006 ஆம் ஆண்டில் இரண்டாவது நாள், ஐந்து மாணவர்கள் எப்படி படுகொலை செய்யப்பட்டனர் என்பதை மறுக்க முடியாத புகைப்பட ஆதாரத்துடன் அவர் நிரூபித்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த மாணவர்கள் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததாலேயே அவர்கள் உயிரிழந்தனர் என்று இலங்கை அரசு கூறியது.( அல்லது உண்மையை மூடி மறைக்கும் வகையில் பச்சைப் பொய் கூறியது).
கருப்பு மாதம்
ஆனால், சுகிர்தராஜன் உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தினார். சுகிர்தராஜனிற்கு முன்னரும் பிறகும் வலிந்து காணமால் ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கைகளைக் கூட்டினால் அது 50ஐ எட்டும். அதில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.
அதிலும் அதிகளவானாவர்கள் ஜனவரி மாதம் பலியாயினர். இதன் காரணமாக ஜனவரி மாதமே ஊடகவியலாளர்களுக்கு கருப்பு மாதமாக உள்ளது.
குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாதது மட்டுமின்றி அவர்கள் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுவது, மேலும் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்ட தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் எந்த நவடிக்கையும் எடுக்கத் தவறியதால் இன்று முழு நாடும் இருண்டு போயுள்ளது.'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

