லசந்த படுகொலையை மூடி மறைக்கிறதா அநுர அரசு...! கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த ஆரப்பாட்டமானது நாளை(06) இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் சட்டமாஅதிபர் அலுவலகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பதவி விலகவேண்டும்,லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்வதன் பின்னால் உள்ள காரணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இளம் பத்திரிகையாளர் சங்கம் நீதி கோரும் அனைவரையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவை வழங்குமாறு கோரியுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சியங்களை அழித்தமை மாற்றியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு கடந்த ஐந்து மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, காவல்துறை பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபால இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் உதலாகம ஆகியோரை முற்றாக வழக்கிலிருந்து விடுவிக்க சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், மேற்படி தீர்மானம் ஊடகங்கள் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளதுடன் அவர்கள் இது குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை உள்ளிட்ட ஏனைய படுகொலைகள் தொடர்பில் அநுர அரசு தற்போது எடுத்துள்ள தீர்மானங்களுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |