முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரிடம் ஏழு மணிநேர விசாரணை
🛑 புதிய இணைப்பு
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணனிடம் ஏழு மணித்தியாலம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2025.08.07 அன்று கணபதிப்பிள்ளை குமணனிற்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், இன்று (17) காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் காவல் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக அவர் சென்றிருந்தார்.
விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபனுடன் விசாரணைக்கு முன்னிலையாகி இருந்தநிலையில் சுமார் பத்து மணியளவில் ஆரம்பித்த விசாரணை ஏழு மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் அழைக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு முன்னலையாகியுள்ளார்.
இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் காவல் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் அவர் இன்று (17) விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 2025.08.07 அன்று ஊடகவியலாளர் குமணன் வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் இன்றைய தினம் (17) அளம்பில் காவல் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வாக்குமூலம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஊடகவியலாளர், “கடந்த வருடம் (2024.10.08) எனது முல்லைத்தீவில் உள்ள வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினர் நான் வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உரிமை பிரச்சினைகள் தொடர்பில் வெளிநாட்டவர்களின் அவதானத்தை பெறும் நோக்கோடு வேலை செய்வதாக தமக்கு ஒரு முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும் அது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வீட்டில் உள்ளவர்களிடம் பெற வேண்டும் என்று சென்றிருந்தார்கள் .
அந்த நேரம் நான் யாழ்ப்பாணத்தில் நின்ற காரணத்தால் தொலைபேசி வழியாக என்னை தொடர்புகொண்ட அவர்கள் நான் நாட்டுக்கு வந்திருப்பதை அறியவில்லை எனவும் அதனால் தான் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வந்தோம் என தெரிவித்தனர்.
பதிலுக்கு நான் நாட்டுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.
மேலதிக விபரங்கள்
நான் இங்கே தான் இருக்கிறேன் என் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் நேரடியாக என்னை அழைத்து விசாரியுங்கள் வீட்டுக்கு சென்று பெற்றோரை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறினேன்.
அதன் பின்னர் ஒருவாரத்துக்குள் என்னை விசாரணைக்கு அழைப்பதாக கூறிச் சென்றார்கள் ஆனால் பின்னர் அழைக்கவில்லை பத்து மாதங்களின் பின்னர் நேற்றுக் காலை என்னை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு எனது சமூகவலைத்தள பதிவுகள் தொடர்பில் ஒரு விசாரணையை ஆரம்பித்திருப்பதாகவும் அது தொடர்பில் வாக்குமூலம் பெற வேண்டும் எனவும் தெரிவித்ததோடு எனது சொந்த முகவரியான முல்லைத்தீவில் உள்ள வீட்டுக்கு சென்று அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
விசாரணைக்கு அழைத்தற்கான மேலதிக விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது.
கடுமையான கண்டணம்
அது தொடர்பில் அழைப்பாணையிலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இந்த CTID அழைப்பாணையை பெறுவது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது.
எனது நாட்டில் நான் சுதந்திரமாக, அச்சமின்றி வாழவும், பணியாற்றவும் விரும்புகிறேன் ஆகவே இவ்வாறான ஒடுக்குமுறை கருவியான விசாரணைகள் நிறுத்தப்பட்டு அச்சமின்றி பணி செய்யும் சூழல் உறுதிப்படுத்தப்படவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தமது கடுமையான கண்டணத்தை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் காவல் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் சட்டத்தரணிகளுடன் விசாரணைக்காக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


