பிழையான செய்தியிடலுக்காக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்
“பத்திரிகை அறிக்கையிடலின் போது பொறுப்புடனும் மற்றும் உண்மையைக் கண்டறிந்தும், செய்தி அறிக்கையிடவும்” என இலங்கையின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(5) உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறித்த பத்திரிகையில் குறிப்பிட்டது போல(Committee rejects move to increase retirement age of Parliament Secretary General) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஓய்வூதிய வயது தொடர்பில் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.
இந்த செய்தி அறிக்கைக்கு பொறுப்புக்கூறவேண்டிய நபர்கள் நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி தவறானது

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“2022 டிசம்பர் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பத்திரிகையில் "Committee rejects move to increase retirement age of Parliament Secretary General" எனும் தலைப்பின் கீழ் பிரசுரிக்கப்பட்ட செய்தியறிக்கை தவறானது.
அண்மையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் அவரது தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்றப் பணியாளர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஓய்வுபெறுதல் பற்றி எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.
அன்றைய தினம் பொதுவாக நாடாளுமன்றப் பணியாளர்களின் ஓய்வூதிய வயது தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடப்பட்டது. அந்தப் பத்திரிகை அறிக்கையிடலில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட பணியாளர்கள் பற்றிய விடயங்கள் தொடர்பிலும் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை”எனத் தெரிவித்திருந்தார்.
ஆலோசனைக் குழுக் கூட்டம்

சபாநாயகரின் மேற்படி அறிவிப்புக்கு இணங்கும் வகையில் சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகையில்,
“மேற்கூறப்பட்ட செய்தி அறிக்கையில் உள்ள அனைத்து விடயங்களும் தவறானது. சபாநாயகரின் கீழ் நிர்வகிக்கப்படும் 'சாவஸ்திரி' கட்டடம் தொடர்பிலும் பொதுவாக நாடாளுமன்றப் பணியாளர்களின் ஓய்வூதிய வயதை ஏனைய அரச சேவையைப் போன்று எந்த மட்டத்தில் பேணுவது என்பது தொடர்பிலும் மாத்திரமே நாடாளுமன்றப் பணியாளர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடினோம்.
அதன்போது நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அல்லது அவரது பணியாளர்கள் தொடர்பில் எந்தவொரு விடயமும் கலந்துரையாடவில்லை. அதனால் இந்த செய்தி அறிக்கைக்கு பொறுப்புக்கூறவேண்டிய நபர்களை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அழைக்குமாறு சபை முதல்வராக கோரிக்கை விடுக்கின்றேன்”என தெரிவித்திருந்தார்.
ஓய்வூதிய வயது

மேற்கூறப்பட்ட பத்திரிகை அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், “அந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஓய்வூதிய வயது தொடர்பில் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.
நாடாளுமன்றப் பணியாளர்களின் ஓய்வூதிய வயது தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடப்பட்டது என தெரிவித்தார்.
நாடாளுமன்றப் பணியாளர்களின் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் சபை முதல்வர் கௌரவ சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரன்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.