தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள்: அரசாங்கத்தின் தீவிர விசாரணைகள்!
இலங்கையில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 8 ஊடகவியலாளர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதை தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைய தினம் (22.10.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடத்தல் சம்பவம்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “2010 முதல் இதுவரையில், ஒரு கடத்தல் சம்பவமும் 8 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
ஊடகவியலாளர் பிரகீத் பண்டார எக்னலிகொட கடத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, மகிந்த ஆரியவன்ச, தனுஷ்க சம்பத் செனவிரட்ன, பாரூக் மொஹமட் சுகைல், சுப்பிரமணியம் பாஸ்கரன், சமில ஜனித் குமார ஏக்கநாயக்க, அசங்க கிருஸாந்த பாலசூரிய, சினேஸ் உபேந்திர, இந்துனில் சிசிர விஜேநாயக்க ஆகியோர் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விடயத்தில் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ஏனைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும், நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
