குருந்தூர்மலையில் நீதிபதியிடம் வாங்கிகட்டிய சரத்வீரசேகர
முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு இன்றையதினம்(04) திடீரென சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர வாங்கி கட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருந்தூர்மலைக்கு நீதிபதி களவிஜயம்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில்,அமைக்கப்பட்டு வரும் விகாரையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா இன்று செவ்வாய்க்கிழமை (04) களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் வருகைதந்திருந்தார்.
இருதரப்பு சட்டத்தரணிகளுடன் ஆராய்வு

இந் நிலையில் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளை, இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத்வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்துத் தெரிவிக்க முற்பட்டார்.
இடையில் குறுக்கிட்ட சரத்வீரசேகர வாங்கி கட்டினார்

அப்போது அவரது கருத்தினை ஏற்க மறுத்த நீதிபதி,நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியாது எனவும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுவதாகவும், அங்கிருந்து சரத் வீரசேகரவினை விலகிச் செல்லுமாறும் எச்சரித்தார்.
அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றுள்ளார்.