இசைப்பிரியா படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் - பிரதமரிடம் கோரிக்கை
லசந்தவின் (Lasantha Wickramatunga) படுகொலைக்கு நீதி வழங்கும் சமநேரம் இசைப்பிரியாவின் (Isaipriya) படுகொலைக்கும் நீதி வழங்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிமலராஜன் (Nimalrajan) தொடக்கம் இசைப்பிரியா வரை இவர்களுக்கான நீதியையும் பெற்றுக் கொடுப்போம் என பிரதமர் உறுதிப்படுத்துவதுடன் செயல் வடிவத்தையும் காட்ட வேண்டும் என சபா குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நீதி அவசியம் லசந்தவின் குடும்பம் போன்று வடக்கு கிழக்கில் மாகாணங்களில் படுகொலை செய்யப்பட்ட பல ஊடகவியலாளர்களுக்கு நீதி இதுவரை கிடைக்கவில்லை.
சரணடைந்த ஊடகவியலாளர் படுகொலை
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு நீதி வேண்டி லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் உறுதியாக இருப்போம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறையில் பணியாற்றியதுடன் கலைத்துறையிலும் சிறப்பான படைப்புக்களை வழங்கிய இசைப்பிரியா இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே 17ஆம் திகதி வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்பதற்கு சனல் நான்கு ஊடகத்தின் ஊடாக ஆதாரங்கள் வெளிவந்தன.
அதன் அடிப்படையில் சரணடைந்த ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்ட முறை மனித குலமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு அசிங்கமானது எனவே பிரதமர் அவர்களே நீங்களும் பெண் என்ற வகையில் இசைப்பிரியாவுக்கான நீதியை பெற்றுக் கொடுங்கள்.
இறுதிப் போரில் இசைப்பிரியாவின் கணவன் சிறிராம் கொல்லப்பட்டதுடன் அவரது மகள் அகல்யா பிறந்து இரண்டு மாதங்களில் மருத்துவ வசதியும் பால்மாவும் இல்லாமையால் புதுமாத்தளனில் இறந்தார்.
அத்தனை துயரங்களையும் சுமந்து கொண்டு சரணடைந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கான நீதி கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)