கோட்டாபயவிடமிருந்து நீதி கிடைக்காது -பகிரங்கமாக அறிவித்தார் கர்தினால்
ஸ்ரீலங்காவில் கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தின் ஊடாக நியாயம் கிடைக்குமெனவும், உண்மை கண்டறியப்படும் எனவும் நம்பவில்லை என கொழும்பு பேராயர் மல்கம் ரஞசித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக நீதித்துறையில் அவரால் எவ்வாறான விடயங்களிலும் தலையீடு செய்ய முடியுமெனவும், ஆகவே நியாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அரிது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. குறிப்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்கள், அமைச்சர்கள் உப குழுவினால் முன்மொழியப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதனைவிட சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவசியமான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், எங்களுக்கு ஜனாதிபதி சார்பில் அனுப்பப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அமைச்சர்கள் உப குழு தொடர்பில் எமக்கு பிரச்சினை காணப்படுகின்றது. முன்னாள் நீதிபதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மீண்டும் ஒருமுறை ஆராய்வதற்காக, சட்ட அறிவற்ற, ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவை, ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலாக நியமிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர்களால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தெரிவு செய்து செயற்பட முடியாது. இது சரியாக இருக்குமென அவர்கள் நினைக்கும் விடயங்களை செயற்படுத்துவதோடு, ஏனையவற்றை அவர்கள் கைவிடுவார்கள் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜனாதிபதி தம்முடைய அமைச்சரவையின் ஆறு பேரை தெரிவு செய்து, ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆராய பணிப்பார் எனின் ஆணைக்குழு எதற்கு? இதற்கு முன்னதாகவும் அரசியல் ரீதியாக முன்னைய அரசாங்கம் ஒரு குழுவை நியமித்து சாட்சிகளை பதிவு செய்திருந்தது.
எனினும் அதில் எமக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு சுயாதீனமான ஒரு விசாரணையை மேற்கொள்வதற்கு சுயாதீனமான ஒரு ஆணைக்குழு அவசியம். குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணையிலும் எமக்குத் திருப்தியில்லை. அதனைவிட 20ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைய, அவர் அதில் தலையீடு செய்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
நீதியரசர்களை அவரே நியமிக்கின்றார். எந்தவொரு அதிகாரியின் மீதும் அவர் அழுத்தத்தை பிரயோகிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. ஆகவே சட்டம் சுயாதீனமாக காணப்படுகின்றது எனக் குறிப்பிட முடியாது.
இன்று காணப்படும் நிலைமை அவ்வாறல்ல, ஜனாதிபதிக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அரசாங்கத்தின் ஊடாக எமக்கு நியாயம் கிடைக்கும், உண்மை வெளிக்கொண்டுவரப்படும் என நாம் நம்பவில்லை. இந்த கடிதத்தை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.