உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் ஜே.வி.பி உறுப்பினர்கள்! மொட்டுக்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களும் தொட்பு பட்டுள்ளதால் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கடுகளவேனும் முன்னுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத்துறை முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் கைது தொடர்பில் நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளை ஒருபோதும் நாங்கள் குழப்பப்போவதில்லை. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருக்கிறோம்.

புலனாய்வுத்துறை முன்னாள் பிரதானி சுரேஷ் சலே சிறந்த அதிகாரி. விசாரணைக்காகவே அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் மாத்திரமல்ல யாராக இருந்தாலும் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு அழைத்தால் அதற்கு செல்லவேண்டும். தகவல்கள் தெரிந்திருந்தால் அதனை தெரிவிக்க வேண்டும்.
எங்களை அழைத்தால் நாங்களும் செல்வோம். இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு அழைப்பது சாட்சி கூறுவதற்கு அழைக்கும் நடவடிக்கையை அரசாங்கத்துக்கு செய்ய முடியும்.
உண்மையான சூத்திரதாரி
அதனால் இந்த தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் காட்டும் வரை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை இந்த அரசாங்கம் மேற்கொள்ளப்போவதில்லை என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.
ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியலில் இருந்த நபர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என்ற கருத்து நாட்டு மக்களிடம் இருக்கிறது.
அவர்களது தேசியப் பட்டியலில் இருந்தவர்களை, அவர்களின் சொத்துக்களை விடுவிக்கின்றனர். அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குகின்றனர்.
இவ்வாறு அனைத்தையும் செய்யும் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கடுகளவேனும் முன்னுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லை” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |