கச்சதீவு உற்சவம் - குழறுபடிகளும் குறைபாடுகளும்..!
கச்சதீவு உற்சவம் கடந்த 3, 4ஆம் திகதிகளில் இடம்பெற்றது, இதில் 2800 இலங்கை பக்தர்களும் 2100 இந்திய பக்தர்களும், வியாபாரிகள், உத்தியோகத்தர்கள் 200 பேர் என மொத்தமாக 5100 பேர் வருகை தந்தனர்.
இதில் பல்வேறுபட்ட குழறுபடிகள் குறைபாடுகள் காணப்பட்டன. கச்சைதீவு பெருநாள் ஒழுங்கமைப்பு தொடர்பாக இந்தியர்கள் மற்றும் இலங்கையர்களால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்தியாவின் தமிழகத்தில் இருந்து வருகை தந்த பக்தர்கள் தமக்கு வழங்கிய உணவு எமக்கு திருப்தியாக அமையவில்லை அதே நேரம் இரண்டு மாதங்களாக பெருநாள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டும் அடிப்படையில் உணவினை கூட மிக நேர்த்தியாக வழங்கவில்லை. உணவினை வழங்க வேண்டும் என்பதற்காகவே ஏதோ ஒன்றை வழங்கினார்கள் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முறையான மலசலகூட வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. 8000 யாத்திரிகள் வருவார்கள் என உத்தேசித்தபோதும் அதற்கு ஏற்றவகையில் போதுமான மலசலகூடங்கள் அமைகப்படவில்லை. அமைக்கப்பட்ட மலசல கூடங்களிலும் முறையாக பராமரிப்பு அமையவில்லை. அதே போல் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 11மணிமுதல் குடிநீருக்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தது. அடுத்த முறை யாத்திரிகர்களின் நலனை கருத்திற்கொண்டு சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இலங்கை கடற்படையினரின் ஆயுதங்கள் தமக்கு அச்சத்தை தருவதாகவும் இந்திய பக்தர்கள் தெரிவித்தனர். இதனை இலங்கை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் தம்மால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை என இந்திய பக்தர்கள் தெரிவித்தனர்.
இதே நிலையில் இதே பிரச்சினைகளை இலங்கையர்களும் சுட்டிக்காட்டிய நிலையில் முக்கியமான நபர்கள் (VIP) இற்கு ஒரு மாதிரியான கவனிப்பு பொதுமக்களிற்கு ஒரு கவனிப்பு என பாகுபாடு தண்ணீர் மலசலகூடம் உணவு இதில் பாகுபாடு தேவையில்லை அனைவரும் யாத்திரீகர்களே எனவும் கடற்படை இந்திய துணைதூதரகம் என்பதனை தாண்டி மாவட்ட செயலகம் தனது கடமையினை இம்முறை திருவிழாவில் கடமைக்காகவா செய்தது என கேள்வி எழுப்பினர்.
மேலும் கடற்படை, காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தும் தவறவிடபட்ட மற்றும் களவாடப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 35 பவுன் என தெரிவிக்கப்பட்டது.
பல பக்தர்களின் பெறுமதிமிக்க பொருட்களும் களவாடப்பட்டுள்ளன. இதன் பொழுது தங்க சங்கிலி ஒன்றை கொள்ளையிட்டு தப்பி செல்ல முயன்றவர் மடக்கி பிடிக்கப்பட்டு நெடுந்தீவு காவல் நிலையத்தில் பாரப்படுத்தபட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் மன்னார் பகுதியை சேர்ந்தவர் என அறிய முடிகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதே நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கென படகு ஒன்று ஒதுக்கப்படுவதாகவும் மேலும் பெறுமதி வாய்ந்த ஊடக சார் உபகரணங்களை வைத்து ஊடகவியலாளர்களுக்கென கூடாரம் ஒன்று வழமையாக வழங்கபடுவதை போல் வழங்கபடும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட கூடாரத்தில் இலங்கை கடற்படையின் ஊடக பிரிவு தங்கியிருந்த பொழுது குறித்த கூடாரங்கள் ஊடகம் என சுட்டிகாட்டியிருந்த நிலையில் ஊடகவியாலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இவ்வாறு இருக்க, மாவட்ட செயலகம் சார்பில் ஊடகத்திற்கு பொறுப்பான எவரும் வருகைதராத நிலையில் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தமக்கனெ இடத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் யாழில் இருந்து கச்சைதீவு வரும் பொழுது மாவட்ட செயலகத்தில் இருந்து அழைப்பெடுத்து வாருங்கள் என தெரிவித்தவர்கள் மீள ஊடகவியலாளர்கள் திரும்புவதற்கு அழைப்பும் எடுக்கவில்லை ஒழுங்கமைப்பும் செய்யவில்லை.
இந்நிலையில் மாவட்ட செயலகம் கைவிட்ட நிலையில், கடற்படை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய நிலையிலும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த சுமார் 15 இற்கும் மேற்பட்ட சிங்கள ஊடகவியலாளர்களை கடற்படை விசேட படகுகளில் அனுப்பிய நிலையில் தமது உயர் அதிகாரிகளினது பிள்ளைகள் மற்றும் கடற்படையினரையும் அனுப்பிய நிலையில் சுமார் மூன்று மூன்று மணத்தியாலமாக கச்சைதீவு கடற்கரையில் யாழ் முல்லைத்தீவை சேர்ந்த 10 ஊடகவியலாளர்கள் காவல் இருந்த நிலையில் இது குறித்து யாழ் மறைமாவட்டத்தின் பங்கு தந்தையான வண ஜெபரட்ணம் அவர்களிடம் தெரியபடுத்தபட்டது. இருப்பினும் தங்களுடைய கட்டுப்பாட்டில் இந் நிகழ்வு இல்லை என தெரிவித்தார்.
இந் நிலையில் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடாத நிலையில் வடமாகாண கடற்படை தளபதி அனுர தென்னகோனிடம் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கூறிய பொழுது என்னிடம் முறையிட வேண்டாம் எப்படியாவது செல்லுங்கள் என தெரிவித்தார்.
இதனையடுத்து ஊடகவியலாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் வடதாரகை படகின் மூலமே ஊடகவியலாளர்கள் தாமாக சென்றதை அவதானிக்க முடிந்தது.
மாவட்ட செயலகம் குறித்த விழா ஏற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பதில்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளின் அசமந்தம் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மீது காட்டப்பட்ட அக்கறை வடக்கு ஊடகவியலாளர்கள் மீது காட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை தமது நிலமை தொடர்பில் அங்கு வருகை தந்த யாழ் இந்திய தூதூதர அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட போது தாம் கடற்படையுடன் பேசி படகினை ஒழுங்கமைத்து தருவதாக உறுதி மொழி வழங்கி சென்றனர். எனினும் ஊடகவியலாளர்களுக்கு படகு வசதி வழங்கப்படவில்லை.
குறித்த நிகழ்வுக்கு வருகை தந்த நீதிபதிகள் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கூட கடற்படையினரால் உரிய கவுரவம் வழங்கப்படவில்லை இல்லை என அங்கு வருகை தந்திருந்த உயர் அரச அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார்.
இதே நிலையில் பயணிகள் படகுகள் வருகை தருமா? தராதா என்ற கேள்வி கச்சைதீவு கடற்கரையில் எழுந்த நிலையில் சில பொதுமக்கள் நெடுந்தீவிற்கு படகு மூலம் சென்று பின்னர் குறிகாட்டுவான் நோக்கி திரும்பியதாக தெரிவித்தனர்.
தாம் முறையான ஒழுங்குபடுத்தல் இன்மையால் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டதாவும் அங்கு வருகை தந்த மக்கள் தெரிவித்தனர்.